| இந்த நிவேதன அமைப்பு ஆனி மகத்திலும் மார்கழித் திருவாதிரையிலும் நடைபெறும் உற்சவகாலங்களில் மாணிக்கவாசகருக்கும் உண்டு. ஆத்மநாதசுவாமிக்கு வருடமுழுவதும் உள்ள நைவேத்யம் மாணிக்கவாசகருக்கும் இந்த இருவிழாக் காலங்களில் (10 +10 =20 நாள்களில்) படைக்கப்படுகிறது. அக்கினி நட்சத்திரகாலங்களில் சுவாமிக்கு இளநீரும் பானகமும், பாசிப் பருப்பும் தனித்த நிவேதனமாகும். (நிவேதனம் பற்றிய வரலாறு இக்குறிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது.) கோயில் கல்வெட்டுக்களில் இத்தலம், “மிழலைக்கூற்றத்து நடுவிற் கூற்றம் பிரமதேசம் தனியூர் திருப்பெருந்துறையான பவுத்திர மாணிக்கச் சதுர்வேத மங்கலம்” என்று குறிக்கப்பட்டுள்ளது. சுந்தர பாண்டிய மண்டபம், அம்பாள் மண்டபச்சுவர்கள், பஞ்சாட்சர மண்டபம் முதலிய இடங்களில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன. இவற்றிலிருந்து அக்காலத்தில் கோயிலுக்கும் சுவாமிக்கும் விடப்பட்ட நிவந்தங்கள் குத்தகைதாரர்களின் பத்திரங்கள், கும்பாபிஷேகம் நடைபெற்ற விவரங்கள், நிர்வாகச் செய்திகள் முதலியவை தெரிய வருகின்றன. இத்திருக் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் ஆதிகயிலாய நாதர் கோயில் உள்ளது. தனிக் கோயில். மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக்காட்சி அங்குத்தான். இக்கோயில் மாணிக்கவாசகருக்கு முன்பிருந்தே உள்ளது. இப்பகுதிகள் அனைத்தும் ஒரு காலத்தில் காடாக இருந்ததாம். தற்போது ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ள இடத்தை, வடக்கூர் (வடக்களூர்) என்றும், ஆவுடையார் கோயில் உள்ள இடத்தைத் தெற்கூர் என்றும் சொல்கின்றனர். ஆதிகயிலாயநாதர் கோயில் கிழக்கு நோக்கியது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு. விநாயகர் கிழக்கிலும் பைரவர் தெற்கிலும் நந்தி மேற்கிலும் எழுந்தருளியுள்ளனர். பராசரர், புலஸ்தியர், அகத்தியர் முதலிய மகரிஷிகள் இங்கிருந்ததாகச் சொல்கின்றனர். ஆதிகயிலாயநாதர் திருக்கோயிலில் திருப்பணிகள் பலவும் செய்தும், புதிய ராசகோபுரம் அமைத்தும், மகாகும்பாபிஷேகம் 25-6-1990 காலையிலும், இத்திருக்கோயில் ராஜகோபுரத்தை, ஐந்து நிலைகளை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணிகள் செய்து புதுப்பித்தும், உள்கோபுரத்தையும் திருப்பணி செய்தும், மஹாகும்பாபிஷேகம் பிரமோதூத ஆண்டு ஆனித்திங்கள், 13-ஆம் நாள் - 27-6-1990 புதன்கிழமையன்று காலை 6-7.30 மணிக்குள்ளும் சிறப்பாக நடைபெற்றது. திருப்பணிக் குழுத்தலைவர் கோவை சிரவணபுரம் |