பக்கம் எண் :

858 திருமுறைத்தலங்கள்


கௌமார மடாலயம் சிரவை யாதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ சுந்தர சுவாமிகள் ஆவார்.
செயலர் கயிலைமணி. ஈரோடு திரு. மு. அழகப்பன், சேர்மன் அழகப்பா
சிமெண்ட் லிமிடெட் அவர்களாவார்.

     திருப்பெருந்துறை நாதனாய ஆத்மநாதசுவாமி நிகழ்த்திய அற்புதங்களுள்
மாணிக்கவாசகரை ஆட்கொண்டதன்றி, அந்தணர் குழந்தைகட்கு வேதம்
ஓதுவித்தது, ‘கீழ்நீர் வெட்டிக் காட்டியது’ முதலியவைகளும் அடங்கும்.
இவ்வரலாறுகளைப் பெருந்துறைப் புராணம், கடவுள் மாமுனிவர் புராணம்,
வீரவனப் புராணம், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
முதலியவைகளில் காண்கிறோம்.

     அவ்வரலாறுகள் வருமாறு:-

(1) அந்தணர் குழந்தைகளுக்கு வேதம் ஓதுவித்தது:

    ஒரு முறை இறைவனே அந்தணராய் கிழவேடங்கொண்டு
பெருந்துறையில் வாழ்ந்து வரும் முந்நூறு அந்தணர் வீட்டுக் குழந்தைகட்கும்
வேதசாத்திரங்களைக் கற்றுத்தர முன்வந்தார். அந்தணர்களும் அது கேட்டு
மகிழ்ந்து விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பாடசாலை யொன்றை ஏற்படுத்தித்
தந்தனர். அந்தணர்களின் வீடுகளில் நாடொறும் புழுங்கலரிசி பாகற்காய்
முளைக்கீரை சமைத்து அப்பெரியவருக்கு உணவாகத் தந்து வந்தனர். அவரும்
அவ்வுணவை உண்டு பிள்ளைகளுக்கு வேதங்களைக் கற்பித்து வந்தார்.
ஞானயோக சாஸ்திரங்கள், வியாகரணம், தர்க்கம் முதலியவை அனைத்தையும்
முறையாகக் கற்பித்தார். குழந்தைகளோடு குழந்தையாய்க் கலந்து ஓடியாடியும்,
கண்ணைப் பொத்தி விளையாடியும் மகிழ்வித்தார்.

     இவருடைய வரவால் குழந்தைகள் பெரிதும் மகிழ்ந்து வேதங்களைப்
பயின்று வந்தனர். ஒருநாள் குழந்தைகளோடு விளையாடிய கிழவர் திடீரென
மறைந்தார். குழந்தைகள் அவரைக் காணாது வருந்தினர் - பெற்றோர்களிடம்
முறையிட்டனர். அவர்களும் மனம் வருந்தி எல்லாவிடங்களிலும் தேடினர்.
பயனில்லை.

     அன்றிரவு குழந்தைகள் அனைவருடைய கனவிலும் ஒரே சமயத்தில்
இறைவன் தோன்றி, “அந்தணக் கிழவராக வந்து உங்களுக்கு வேத
சாத்திரங்களைக் கற்பித்தது நானே. உங்கள் பெற்றோரிடம் சொல்லி
இதுவரையில் நான் சுடச்சுட விரும்பியுண்டு வந்த புழுங்கல் அரிசி,
முளைக்கீரை, பாகற்காய் ஆகிய இவற்றையே எனக்குச் சமைத்துச் சூட்டோடு
நிவேதித்து வரச்செய்யுங்கள்” என்றருளி