ஆகவே, அப்போதைய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திரு. M. பக்தவத்சலம் அவர்கள், அப்போதைய அறநிலையத்துறை ஆணையராக இருந்த திரு. உத்தண்டராமப் பிள்ளை அவர்கள் ஆகியோரின் பெருமுயற்சியால் திருவிளம்பூதூர் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் - பூண்டியில் புதிய கோயிலாகக் கட்டப்பட்டு 5-7-1968 அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. இச்செய்தி பற்றிய குறிப்பு கல்லிற்பொறித்து அம்பாள் சந்நிதி வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது. சுந்தரர் பாடிய பதிகம் உள்ளது. திருமுல்லைவாயில் பணிந்து, பின்பு, இங்கு வந்த சுந்தரர், அடியார்சூழ ஆலயம் சென்று ‘கோயில் உளாயோ’ என்று விண்ணப்பிக்க, இறைவன் ஊன்றுகோலை அருளிச்செய்து ‘யாம் உளோம் போகீர்’ என்றார். அதுகேட்ட சுந்தரர் ‘பிழையுளன பொறுத்திடுவர்’ என்னும் பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் இங்கிருந்து பழையனூர் சென்றார். இறைவன் - ஆதாரதண்டேஸ்வர், ஊன்றீஸ்வரர். இறைவி - தடித கௌரி அம்பாள், மின்னொளியம்மை. சுந்தரர் பாடல் பெற்றது. கோயில், சாலையோரத்தில் உள்ளது. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் உள்ளது. உள்ளே நுழைந்ததும் நேரே அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது. வெளிப்பிராகாரம் புல்தரை. சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரமில்லை. நந்தி பலிபீடங்கள் உயரத்தில் உள்ளன. வாயிலுள் நுழைந்ததும் கல்மண்டபம் - அழகான கட்டமைப்புடையது. இடப்பால் சூரியன் சந்நிதியும், நவக்கிரக சந்நிதியும் உள்ளன. வலப்பால் நால்வர், பைரவர், அருணகிரிநாதர் சந்நிதிகள். பக்கத்தில் அம்பலக் கூத்தருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உள்ளனர். பக்கத்தில் பிரதோஷ நாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வயானை, சோமாஸ்கந்தர் முதலிய உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி - மின்னொளியம்மை கோயில் தெற்கு நோக்கிய சந்நிதியாக உள்ளது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். கண்பார்வையை இழந்த சுந்தரர், வெண்பாக்கத்தை நோக்கி வரும்போது அம்பாள் மின்னலைப் போன்ற ஒளி அளித்து வழிகாட்டி மறைந்தனளாம். நேரே மூலவர் தரிசனம். வாயிலின் இருபுறத்திலும் துவாரகணபதியும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். மூலவர் சிவலிங்கத் திருமேனி ஆவுடையார் தாழ உள்ளது. எதிரில் நந்தி, வலக் கொம்பொடிந்துள்ளது. கண் வேண்டிய |