| லட்சத்து பத்தாயிரம் கலம் நெல் இக்கோயிலுக்கு அளக்கப்பட்டது என்ற செய்தி தெரிகிறது. இங்குள்ள சிங்கமுகக்கேணியின் மீதுள்ள கல்வெட்டு அதை உடையார்பாளையம் ஜமீன்தார் கட்டியதாகக் கூறுகிறது.ஆனால் அக்கேணி முதலாம் இராசேந்திரன் காலத்திலேயே கட்டப்பட்டு சென்ற நூற்றாண்டில் ஜமீன்தாரால் திருப்பணி செய்யப்பட்டிருக்க வேண்டும். சோழப் பேரரசை வென்ற சடையவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனும், சோழர் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தை அழித்தான் எனினும் கோயிலுக்கு எவ்வித ஊறும் விளைவிக்கவில்லை யென்றும் ; மாறாகத் தன் பெயரால் பெருமானுக்குப் பூசை நடத்த நிவந்தம் வைத்தான் என்பதும் தெரிகின்றது. இக்கோயிலில் உள்ள சிற்பங்களுள் சரஸ்வதி, லட்சுமி, சண்டேச அனுக்ரஹமூர்த்தி, அர்த்தநாரி, தட்சிணாமூர்த்தி, நடராசர், கங்காதரர், காளாந்தகர், துர்க்கை, பைரவர், பிட்சாடனர், அதிகாரநந்தி முதலியவை குறிப்பிடத்தக்கனவாம். முதலாம் இராசேந்திரன் இங்குள்ள பெருமானுக்குத் தஞ்சைப் பெருவுடையாரின் பெயரையே வைத்து வழங்கினான். இறைவன் - கங்கை கொண்ட சோழேச்சரர், பிரகதீஸ்வரர், பெருவுடையார். இறைவி - பெரியநாயகி, பிருகந்நாயகி. இத்தலத்துப் பெருமான் மீது கருவூர்த்தேவர் (திருவிசைப்பா) பதிகம் பாடியுள்ளார். மூலவர் சிவலிங்கமூர்த்தி பேருருவம் 13 அடி உயரம். ஆவுடையார் சுற்றளவு 60 அடி - ஒரே கல்லால் ஆனவை. விமானம் 160 அடி உயரம் - 100 அடி சதுரமானது. கோயிலின் சிறப்புக்களை நூலிற் படித்துவிட்டு நேரில் காணச் செல்வோர்க்கு மிஞ்சுவது, இடிபாடுகளைக் காண்பதால் வரும் வேதனையே ! கோயிலுக்கு முன்னால் மொட்டைக்கோபுரம் - வாயில் தாண்டியதும் அழகான நடைபாதை - சுற்றிலும் புல் தரைகள். வலப்பால் மகிஷாசுரமர்த்தினி கோயில் உள்ளது. அம்பாள் இருபது கரங்களுடன் காட்சி தருகின்றாள். அபயவரதம் நீங்கலாக 18 கரங்களில் 18 ஆயுதங்கள் உள்ளன. பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில் இத்தேவிக்கு, காவடி எடுத்து விழாக் கொண்டாடப்படுகிறது. |