| சற்றுத் தள்ளிச் சென்றால் சுதையாலான பெரிய யாளி காட்சி தருகிறது. அதனுள் இறங்கிச் சென்று “சிம்மக்கிணற்றை”க் காணலாம். படிகள் உள்ளன. இக்கிணற்றில் கங்கை நீர் கலந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மதிற்சுவர்கள் இடிந்து போயுள்ளன. பெரிய வாயிலுக்கு (கிழக்கு வாயில்) நேராகப் பெரிய நந்தியுள்ளது. படிகள் வழியே மேலேறி உட்சென்றால் பிரம்மாண்டமான மூலமூர்த்தியைத் தரிசிக்கலாம். சுவாமி கிழக்கு நோக்கியுள்ளார். இருபுறமும் வாயிலில் கருங்கல்லாலான துவாரபாலகர்கள் காட்சியளிக்கின்றனர். உள்ளே நுழைந்து செல்லும்போது வலப்பால் நவக்கிரக பீடமுள்ளது. இங்குள்ள நவக்கிரக அமைப்பு விந்தையானது. ஒன்பது கிரகங்களும் ஒரே கல்லில் வானசாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டுள்ளன. பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன். சுற்றிலும் ஏழு கிரகங்கள் இதழ்கள் போன்ற அமைப்பில் உள்ளன. கீழே ஏழு குதிரைகள் பூட்டிய தேரை அருணன் சாரதியாக இருந்து செலுத்துவது ; ஒருபால் 12 பேர் நாதஸ்வர வாத்யங்களை வாசிப்பது, கடையாணி பூட்டிய தேரில் உலகை வலம் வரும் கோலம் - மிகவும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. உள் மண்டபத்தில் செல்லும் போது கருங்கல் தூண்களின் ஒழுங்கும், அழகும் கண்டு மகிழலாம். ஒருபுறம் பழைய திருமேனிகள் பார்வையிற்படுகின்றன. நடராசர் சிவகாமி தரிசனம். உள் வாயிலைத் தாண்டினால் மூலவர் தரிசனம். மின் விளக்கு இல்லையெனினும், வெளியிலுள்ள பெரிய நந்தியின் மீது படும் ஒளி பிரதிபலித்து, சுவாமி மீது படுவதால் நன்கு தரிசிக்க முடிகிறது. மூலவர் முன்பு நிற்குங்கால் - வெளியில் கொதிக்கும் வெயிலாக இருந்த போதிலும் - உள்புறம் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது. இயற்கை ஏ.சி. வசதி போலும் ! இதற்குச் சொல்லப்படும் காரணம் :- மூலவரின் அடியில் சந்திரகாந்தக்கல் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பக்காலத்தில் வெளியில் கொதிக்கும் வெயிலாக இருக்கும்போது உள்ளே சில்லென்றிருக்கின்றது. இவ்வாறே மார்கழி போன்ற குளிர்காலத்தில் உள்ளே கதகதப்பாக இருக்கின்றது என்று கோயிற் சிவாசாரியார் கூறுகின்றார். மூலவரை வணங்கிய பின்பு வெளியே வந்து படிகளில் இறங்கி வலமாக வந்தால் பிட்சாடனர், அர்த்த நாரீசுவர், தட்சிணாமூர்த்தி, |