18. திருக்கள்ளில் திருக்கள்ளம், திருக்கண்டலம். | தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் திருக்கள்ளம், திருக்கண்டலம் என வழங்கப்படுகிறது. 1) சென்னை - பெரியபாளையம் பேருந்துச் சாலையில் கன்னிகைப்பேர் என்று வழங்கும் கன்னிப்புத்தூரையடைந்து, அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூரை அடையலாம். 2) திருவள்ளூர் - செங்குன்றம் (REDHILLS), பெரியபாளையம் பேருந்துச் சாலையில் தாமரைப்பாக்கம் கூட்ரோடினை அடைந்து அங்கிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் திரும்பிச் சென்று, ‘வெங்கல்’ கிராமத்தை அடைந்து, சாலையில் ‘கன்னிகைப்பேர்’ என்று வழிகாட்டிக்கல் காட்டும் பாதையில் (வலப்புறமாக) திரும்பி 10 கி.மீ. சென்றால் திருக்கண்டலம் (திருக்கள்ளில்) தலத்தை அடையலாம். 3) சென்னை - பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து வெங்கலுக்குப் போகும் பேருந்து திருக்கண்டலம் வழியாகச் செல்கிறது. அடிக்கடி பேருந்து வசதியில்லை. தனி வாகனத்தில் சென்று வருவதே எளிது. கோயில் வரை வாகனத்தில் செல்லலாம். (இத்தலம் வெங்கல் கிராமத்திற்கும் கன்னிகைப்பேருக்கும் (கன்னிகைப் புத்தூருக்கும்) இடையில், கன்னிகைப்பேருக்கு அண்மையில் உள்ளது.) பிருகு முனிவர் வழிபட்ட தலம் என்பர். சுவாமி விமானம் தூங்கானை மாட அமைப்புடையது. இறைவன் - சிவானந்தேஸ்வரர் இறைவி - ஆனந்தவல்லி தீர்த்தம் - நந்தி தீர்த்தம். கோயிலுக்கு எதிரில் தீர்த்தக் குளம் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்றது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் இத்திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு, 22.1.1999ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. |