(தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது.) பாடல் “பாம்பணைத்துயின்றோன் அயன்முதல் தேவர் பன்னெடுங்காலம் நின்காண்பான் ஏம்பலித்திருக்க என்னுளம் புகுந்த எளிமையை என்றும் நான்மறக்கேன் தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத் தெளிதருதேறல் பாய்ந்து ஒழுகும் பூம்பணைச்சோலை ஆவணவீதிப் பூவணங்கோயில் கொண்டாயே.” (கருவூர்த்தேவர்) 8. திருச்சாட்டியக்குடி சாட்டியக்குடி - சாத்தியக்குடி | தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற தலம். மக்கள் வழக்கில் சாட்டியக்குடி, சாத்தியக்குடி என்று வழங்குகிறது. (1) கீழ்வேளூரிலிருந்து (கீவளூரிலிருந்து) கச்சினம் வழியாகத் திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழியில் இத்தலமுள்ளது. (2) திருவாரூரிலிருந்து தேவூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் தேவூரை அடுத்துச் சாலையோரத்தில் சாட்டியக்குடி உள்ளது. மெயின்ரோடிலிருந்து சற்றுத் தள்ளி, உள்ளே கோயிலிருக்கிறது. கோயில் வரை பேருந்து செல்லும். ஊர் : சாட்டியக்குடி. கோயில்: ஏழிருக்கை. ஆறு ஆதாரங்களுக்கும் மேலாகிய ஏழாவது இடத்தை - துவாதசாந்த இருக்கையை, ஏழிருக்கை என்பர். இந்நினைவைத் தரும் வகையில் கோயிலின் பெயர் அமைந்துள்ளது. இது பற்றியே இத்தலத்திருவிசைப்பா பதிகத்தில் கருவூர்த்தேவர் ஒவ்வொரு பாட்டிலும் “ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே”என்று பாடியுள்ளார். |