வேதமோதுவார்க்கும் வழிபாட்டுக்கும் இறையிலியாக நிலங்களை யளித்ததும் ஆகிய செய்திகள் தெரியவருகின்றன. இரண்டாம் பிராகாரத்தில் வடக்கு மதிற்சுவரில் இரு உருவங்கள் செதுக்கப்பட்டு அவைகளின் மேல் பொற்கோயில் நம்பி, தில்லை மூவாயிரநம்பி என்னும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் ஒரு மேடையில் ரிஷபம், இடையன், குடம், பாம்பு முதலிய உருவங்களும், சற்றுத் தள்ளி மன்னன் ஒருவன் உள்ளிட்ட பல உருவங்களும் உள்ளன. இவற்றின் விவரம் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை தலபுராணத்துடன் தொடர்புடையனவாக இருக்கலாம். சேந்தனார் பாடியுள்ள திருவிசைப்பா பதிகம் முருகனைப் பற்றியது. அந்தாதி அமைப்பில் பாடப்பட்டுள்ளது. இப்பதிகம் ; தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின் துன்பத்தையும் - ஆற்றாமையையும் கண்டு, நற்றாய் இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது. கோயிலில் தேசாந்திரி கட்டளை உள்ளது. நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில் தூய்மையாக நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் உள்ள திருமுறைத்தலம் திருக்கடவூர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய திருமிகு. மங்கலமுடையார் அவர்கள் இம் முருகப் பெருமானால் ஈர்த்து ஆட்கொள்ளப்பட்டு இத்திருக்கோயிற் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு இவருடைய பெருமுயற்சியாலேயே அழகான இராஜகோபுரம் கட்டப்பட்டு (1-9-1977ல்) குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. “மாலுலா மனம்தந்து என் கையிற் சங்கம் வவ்வினான், மலைமகள் மதலை மேலுலாந் தேவர் குலமுழு தாளுக் குமரவேள் வள்ளிதன் மணாளன் சேலுலாங் கழனித் திருவிடைக்கழியில் திருக்குரா நீழற்கிழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்லியல் இவளே.” |