பக்கம் எண் :

114துரை-மாலிறையன்

செபுறயீல் பறந்து வந்தார்

முகில்வானை நீங்கிவரும் நிலவைப் போல

முத்தணிந்த முழுச்சுடராய் வெண்பு கையைத்

துகிலாக உடுத்தியுள தூய்மை யோடு

தோழமையின் நல்லுணர்வு கண்ணில் தோன்றப்

பகிர்ந்தளித்த முறையினிலே விண்ணும் மண்ணும்

படர்சிறகை விரித்தபடி தலைமை வானோர்

புகழ்மிகுந்த செபுறயீல் பறந்து வந்து

பொலிந்தமுகம் மதுவின்முன் “சலாம்” என்றாரே! 9

நோன்பு இயற்றுகின்றீரோ?

“அழகுருவும் நற்பண்பும் அமைந்த வள்ளால்!

அரிதான தீன்நெறியை அடைதற் கான

விழுமியநோன் பியற்றுகிறீர் அன்றோ? என்று

விளம்பியவர் செபுறயீல் நல்லோர் மேனி

தழுவியுள கமழ்மணத்துள் குளித்த காற்றுத்

தம்மேனி தழுவுகிற வண்ண மாகத்

தொழும் இறைவன் தோன்றுமொளி விண்ணில்ஏறித்

தொடுதற்கே அரிதான இடம்சேர்ந் தாரே! 10

மீண்டும் செபுறயீல் வந்தார்

மறுநாளும் இருள்சூழ்ந்த வேளை தன்னில்

மறுவில்லாத் திங்கள்போல் மலைமேல் தோன்றிப்

“பெருமானே! இம்மலையில் இன்னும் தாங்கள்

பீடுபெற இருந்து என்றன் உயிராய் ஆனீர்

வருகின்றேன்” எனக்கூறி வானோர் கோமான்

வனப்புடைய முகமதுவை நோக்கிக் கொண்டே

அருவானம் மேலேறிப் பறந்து போனார்

அருங்கதிர்போல் செபுறயீல் வந்த வாறே! 11