பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்115


மீண்டும் ஒருநாள் செபுறயீல் வந்தார்

இவ்வண்ணம் இருநாளும் வானோர் வந்தாங்(கு)

ஏகுகிற நிலைகண்ட பெருமான், “ஏனோ

செவ்வண்ணம் காட்டுகிற தன்மை? இன்றும்

செல்லாமல் நாமிங்கே இருப்போம்” என்றே

அவ்வண்ண மலைக் குன்றில் தங்கி விட்டார்

அடுத்துற்ற அரிதான திங்கள் அந்நாள்

எவ்வண்ணம் வந்தாரோ முன்அவ் வண்ணம்

இரவதனில் இனியவர்முன் வந்து நின்றார். 12

இறைவன் இதனைத் தங்களிடம் தரச் சொன்னார்

பனிமலைபோல் எதிர்நின்று பொலிந்த வானோர்

பணிவுடனே முகம்மதுநேர் சலாமும் வைத்துத்

“தனிஇறைவன் தங்களுக்குச் சலாம் உரைத்தான்

தகவுடையீர்! யானதனைத் தந்தேன்” என்று

நனிமணிகள் பலவைத்துத் தைக்கப் பட்ட

நலமின்னும் பொன்னாடை தன்னைக் கையில்

புனிதமுறு திங்களினை ஏந்தி நிற்றல்

போல் வானச் செபுறயீல் வைத்திருந்தார்; 13

கலிமா மூல மந்திரம் சொன்னார்

பொன்னார்த்த மணித்துணியை ஏந்தி நின்ற

புகழ்விண்ணோர் முகம்மதுவை நோக்கி நோக்கி

மின்னார்த்த மணிநாவால் கலிமா என்னும்

மேன்மையுறு மந்திரத்தை முறையாய்ச் சொல்லி

முன்னமைந்த வணம் இருந்த முகத்தி னார்முன்

முறைமையினால் சலாம் உரைத்த வண்ணமாகச்

சொன்னபுகழ்த் துகிலதனைப் பெருமான் தங்கள்

சுடர்மணியின் வலக்கையில் வைத்து உவந்தே; 14