பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்119


மலைமேல் என்ன நடந்தது கூறுங்கள்

உளம்கவர்ந்த பெருமானார் காய்ச்ச லாலே

உடல்நடுங்கு நிலைகண்ட கதீசா அம்மை

குளம்கவர்ந்த நீருடைய கண்ண ராகிக்

குளிர்தணிக்கும் போர்வையினால் மெய்யைப் போர்த்து

வளம் கவர்ந்த அன்புகொண்ட மனத்தில் அச்சம்

வரக்கலங்கிக் கொண்டவரின் நிலைக்கு வாடி

“நலம் கலங்கி உள்ளவரே! குன்றிடத்தில்

நடந்த வற்றை நவில்க” எனப் பரிந்து கேட்டார். 24

யீறாக் குன்றில் நடந்ததைக் கூறினார்

உயிர்ஒக்கும் துணைஅம்மை கேட்ட போதே

ஒளிமைந்தர் அருள்யீறாக் குன்றின்மீதில்

பயிலாத ஒருவானோர் வருகையையும்

பரிவோடு பாராட்டி உரைத்த தையும்

வெயில் உமிழும் மணிமுத்தின் ஆடை தந்து

விளக்கமுற ஓதிடவே சொன்ன தையும்

மயிலன்ன பெருஞ்சிறகுக் கைவிரித்து

மார்போடு அணைத்திறுக்கி விட்டதையும்; 25

அனைத்தையும் கூறினார்

மாண்புமிகும் மணித்துணியில் பொறிக்கப்பட்ட

மறப்பறியாத் திருமொழிகள் படித்த தையும்

வேண்டி நின்ற வியன்விழியார் படித்த அன்னார்

விரைவினையும் தெளிவினையும் விழைந்த தையும்

ஆண்டிருந்தே அருவானோர் பறந்த தையும்

அதிர்ந்தபடி தாம்மனைக்கு மீண்ட தையும்

கூண்டிலுள்ள கிளிஒன்று கூறல்போலக்

கோமகனார் அனைத்தினையும் கூறக் கேட்டே; 26