பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்135


யானே அவன் தூதன் என்றார்

கயவர்களோ கனியவிலை கடவள்நெறி வந்தவரோ கலங்கவில்லை
அயலவரோ இனத்தவரோ அனைவருமே சமமென்னும் அல்லா கூற்றைச்
செயல்படுத்த வந்தவராம் செழுந்தலைவர் நபிபெருமான் சீர்த்த நாவால்
உயர்இறைவன் ஒருவன் அவன் உருவிலி யான் தூதனென உணர்த்தி வந்தார். 40

ஒருவன் துணியால் கழுத்தை இறுக்கினான்

இறைவணக்கம் புரிகின்ற ககுபாவில் நபியோர் நாள் இறையை நோக்கி
மறைஉரையாம் திருக்குர்ஆன் ஓதிஇருந்திடும் வேளை மக்கா வாழ்வோன்
முறையற்றுத் துணிஒன்றால் அருட்பெம்மான் உயிர்போக்க முயலும்போது
நிறைஅமைதி உடனிருந்தார் அபூபக்கர் உயிர்காத்தே நிறைவுகொண்டார். 41

முகம்மது அருள் ஒன்றே பொழிந்தார்

மனிதநிலை இழந்தவர்கள் தம்சிறிய நினைவுகளால் மாண்பு கெட்டுப்
புனிதமகனார் தலைமேல் புலைப்பொருளைக் கொட்டிமிகப் புன்மைசெய்தும்
கனிதவழும் முகத்தாலும் கடவுள்நெறி அகத்தாலும் அருள்ஒன்றையே
நனிபொழியும் நிலையினராய் அமர்ந்திருந்த முகம்மது புன்னகையே செய்தார் 42

ஒட்டகத்தின் சதை எலும்பை மேலே கொட்டினார்

மற்றோர்நாள் ககுபாவில் முகம்மதுநேர் தொழுதிருக்க மனித மாண்பே
வற்றியராம் அம்மாறா உமையாஉத் பாஉக்பா வலீது சைபா
சிற்றறிவே உடையவர்கள் செந்தணாளர் மெய்யின்மேல் செத்துப்பன்னாள்
உற்றழுகும் ஒட்டகத்தின் சதைஎலும்பு குடலெல்லாம் ஒருங்கே போட்டார்; 43

பாத்திமா நல்லார் வந்து காத்தார்

கயவர்கள் அபூசகுல் கூட்டமது கண்டாங்கே களிப்புக் கொள்ள
அயல்கண்டோர் சிறான்அஞ்சி ஓடிஅதைப் பாத்திமா தமக்குக் கூற
கயல்விழியார் பதைத்தபடி உடனோடிப் புறந்தள்ளிக் காத்தார் ஆங்கே
நயமில்லா தவரையெல்லாம் கடிந்துரைத்த மகளோடும் நபியார் சென்றார். 44

அக்கம் என்பான் முகத்தால் பழித்துக் காட்டினான்

நல்லுணர்வே இல்லாத எளியனாம்ஓர் அக்கம்என்பான் நபிமுன் வந்தால்
வல்லுருவம் போல்முகத்தை வளைத்துமிகச் சுளித்திளித்து வாயைக் கோணிச்
செல்லுவதும் இழிசொற்கள் சொல்லுவதுமாய்ப் பழிப்புச் செய்யக் கண்டோர்
நல்லதிலை எனச்சொல்லி நயமாக எடுத்துரைத்தும் நாணவில்லை; 45