பக்கம் எண் :

138துரை-மாலிறையன்

அம்மாறு, யாசிறு, சுமையா மாண்பு பெற்றவர்

அரும்பெருமான் நபியார்சொல் தீன்நெறியே நலமென்ற அரியோர் எல்லாம்
பெரும்பகையார் நெறிகேடர் கண்பட்டும் இடர்பட்டும் பேதலித்தார்
திருநெறியார் தமக்குள்ளே வரம்பெற்ற அம்மாறும் தீதில் பெற்றோர்
பெருமைமிகு யாசிறுவும் தாய்சுமையா மகளாரும் பெற்றார் மாண்பே! 58

துணிகூட இல்லாமல் அடித்தனர்

அம்மாறு முதலான நால்வரையும் பிடித்தேகி அடித்துச் சாய்த்துக்
கம்மாளர் செம்புதனைக் காய்ச்சி அடித்திடுவதுபோல் கவிழ்த்துப்போட்டுச்
சும்மாஓர் துணிகூட இலாதபடி துன்புறுத்திச் சுடுமண் மீதில்
அம்மா அம்மா என்றே அழுதாலும் அருந்தீமை அதையே செய்தார்; 59

ஒருவர் துன்பத்தை ஒருவர் ஏற்றார்

துணைவர்மேல் விழும் அடியை மனைவிஏற்றார் மனைவியவர் துடிக்கும்போது
மணவாளர் அழுதாரே இருவர்தம் உடல்களையும் மடவோர் தாக்க
மணிவிளக்காம் திருமகளார் மயங்கினரே மூவருமே வருந்து கையில்
தணிவின்றி அம்மாறா தணல்புழுப்போல் துடிதுடித்துத் தவித்தார் ஆங்கே! 60

தொடர்ந்து வேதனையே செய்தார்

செவ்வாழைப் பழம் கனிந்து கருத்தல்போல் உடல்கருத்துத் தீய்ந்து சாயச்
செவ்வானம் முகில்சூழ இருண்டதுமேல் முகமிருண்டு குருதி சிந்த
ஒவ்வாத மனத்தவர்கள் ஒருபோதும் இரங்காமல் ஒழிக்க எண்ணி
வெவ்வினையே தொடர்ந்தியற்றி வேதனையே செய்வித்தார் விளக்கம் அற்றே!61

உங்களுக்கே பொன்னுலகம் என்றார்

ஆங்கவரைக் கண்டவராம் அருந்தூதர், அவர்தம்மை அன்பால் நோக்கி
“ஈங்கிவர்கள் செய்கின்ற இடையூற்றைப் பொறுக்கின்றீர் இனியர் ஆனீர்
ஓங்கிவரும் பொன்னுலகம் உங்களையே உரிமைசொல்லும் உணர்க” என்றே
தாங்கியவர் துயரமெலாம் பறந்தோடச் செய்கின்ற தமிழ்போல் ஆனார். 62

சுமையா முதல் தியாகத்தாய் ஆனார்

இரக்கமிலா வன்னெஞ்சர் செயும்கொடுமை தனைஇனியும் ஈங்குக்காணல்
அரக்கமனத் தார்க்காகும் அருந்தாய்மை கொண்டவர்க்கோ ஆகாதென்றே
சிறக்கமனம் கொண்டவராம் நற்சுமையா அன்னையவர் சிந்தைசெய்து
துறக்கமது செலத்துணிந்து யாவர்க்கும் முதல் தாயாய் தோற்றம் உற்றார். 63