பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்165


உத்துபா தன் வீரம் தோற்று விட்டான்

வானவரும் மறுப்புரைக்க இயலா வண்ண

மாண்புரைகள் தருகின்றா னாம்நேர் வந்தோர்

காணஅரும் புதுமைவினை செய்கின் றானாம்

கண்டுவிட்டான் அவன்பெருமை உதுபா தானாம்

போனவெறும் வீரமெல்லாம் ஆங்கே போட்டுப்

புதுமாண்பு பெற்றவன்போல் பேசுகின்றான்

ஆனவரை பார்த்திடுவோம்” என்று கூறி

அபூசகுலோ தம்மவர்முன் கொதித்துச் சொன்னான். 35

அபூசகுல் அனைவரிடமும் உறுமினான்

உருவில்லான் ஒரு பகைவன் அபூச குல்தன்

உணர்வோடும் ஒன்றிவரு வோரைக் கூட்டிப்

“பொருவில்லா என்உரையைக் கேட்பீர்; இன்றேல்

பொய்யுரையான் வழிசென்று மாட்டிக் கொள்வீர்;

தெருவெல்லாம் திரிந்தேதான் நபியே என்பான்

செய்மயக்கு வினையெல்லாம் எனக்கு முன்னே

உருவில்லாமல் போதல் உண்மை” என்றே

உரைத்தவனாய் அபூசகுல் ஆங்(கு)உறுமி னானே. 36

வருமுன்னர்க் காத்துக் கொள்ள வேண்டும்

வருமுன்னர்க் காப்பவர்க்கே வாழ்க்கை கிட்டும்

வந்தபின்னே எதிர்கொளலாம் என்னும் வாழ்க்கை

எரிமுன்னர் வைக்கோல்போல் அழிந்தே போகும்

என்பதனை நீவிரெலாம் உணர வேண்டும்

கருவுள்ளே வருதற்கு முன்னே எல்லாம்

கற்றவனாய் இருக்குமுகம் மதுவை நாமே

உருவில்லா முறைசெய்து கொல்வோம் என்றே

ஒளியில்லார் முன்னிருளே கக்கி னானே; 37