பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்169


உறவையும் நட்பையும் மதிப்பதில்லை

“பெரியவர்கள் செய்தெய்வ வணக்க மெல்லாம்

பெருமையிலை என்கின்றான் மரபு மாறா(து)

அரியவர்கள் செய்கின்ற சடங்கை எல்லாம்

அருவருப்பாய்க் கூறுகின்றான்; மதிப்ப தற்கே

உரியவர்கள் ஆம்சமயத் தலைவர் தம்மை

ஒதுக்கிவிடச் சொல்கின்றான்; தானே எல்லாம்

தெரிந்தவன்போல் பேசுகின்றான்; உறவை நட்பைத்

தீண்டாமல் விலக்குகிறான்; யாது செய்வோம்? 47

“மன்னரையும் ஒழிப்பேன்” என்கிறான்

மண்ணாளும் வேந்தரையும் மாய்க்க வல்ல

மகம்மதுவே தான்என்று மார்பைத் தட்டிக்

கண்ணாலும் முறைக்கின்றான்; கருணை அற்ற

கருத்தாலும் உரைக்கின்றான்; எங்கோ உள்ள

விண்ணாளும் ஒருவனைத்தான் மதிப்பேன்” என்று

வீறார்ப்பும் காட்டுகிறான் மக்கள் தம்மை

முள்நாணும் படியான சொற்க ளாலே

முறையற்றுக் குத்துகிறான் கொடுமை ஐயா! 48

நாங்கள் அஞ்சி அஞ்சி வாழ்கிறோம்

வெறுப்பான புன்மொழிகள்; தீமை ஒன்றே

விளைவான செயல்முறைகள் எதற்கெதற்கும்

மறுப்பான நடைமுறைகள்; மதிப்பில்லாத

மதர்ப்பான தடைவிடைகள் எதிர்த்துக் கேட்டால்

ஒறுப்பானோ எனும்அச்சம் மிகவே கொண்டும்

ஒதுங்கித்தான் இருக்கின்றோம்; இவற்றுக் கெல்லாம்

பொறுப்பானோர் தாங்களெனும் எண்ணத்தாலே

புவியினுமோர் பொறுமையராய் வாழுகின்றோம். 49