பக்கம் எண் :

174துரை-மாலிறையன்

5. கபீபு மன்னர் உண்மை உணர்ந்த படலம்

திங்களை அழைத்தது

வஞ்சமனத்தான் அபூசகுல் வந்தான்

ஆற்றலும் அறிவும் மிக்க அரசராம் கபீபு நோன்பு
நோற்றநன் மக்கா ஊரில் நோக்கத்தில் சிறந்தாராக
வீற்றிருக்கின்ற நாளில் விழைவஞ்ச மனத்தன் அன்பைத்
தூற்றிடும் அபூசகுல் தன் துணைவர்கள் சூழ வந்தான். 1

கயவன் தன் துணைவரோடு வருதல்

வாய்மையை மறந்த உத்பா வலிமையை இழந்த உக்பா
தூய்மையைத் துறந்த சைபா தொல்லைசெய் உமையா நீங்கா
நோய்மன அம்மா றத்து நுவல்சின வலீது மற்றும்
காய்மனத் துணைவர் சூழக் கபீபுமுன் கயவன் வந்தான். 2

கபீபு மன்னர் ஏன் அழைத்தீர்? எனக் கேட்டார்

முட்களின் நடுவில் நஞ்சு முளைத்திருப் பதனைப் போல
உட்சுடர் ஒளி இல்லாத உறுசின அபூசகுல் தன்
நட்பினர் நடுவில் வந்தான் நாடிய கபீபு “என்னைக்
கட்புலன் காண அன்னான் கரைந்ததேன்” என்று கேட்டார். 3

அனைவரும் முகம்மதுவைக் குறை கூறினார்

மத்தளம் எனமு ழங்கும் மமதையான் அபூச கூலின்
ஒத்தென இருந்த நண்பர் உடன்உடன் தலைஅசைக்க
முத்தொளி முகத்தி னாராம் முகம்மது தமை வஞ்சித்தும்
ஒத்திலாக் கரியன் என்றும் ஒன்றுபட் டாங்கு ரைத்தார். 4

முகம்மதுவை மதிக்காதீர்

“அரியராய் வந்த எங்கள் அரசரே! எமைவாழ் விக்க
உரியராய் நீரே வந்தீர் உதவவே விண்ணப்பித்தோம்;
கரியனாய் இருக்கும் இந்தக் கறைமுகம் மதுவைத் தாங்கள்
பெரியனாய் எண்ண வேண்டாம் பீடிலாச் செயல்செய் கின்றான்; 5