பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்189


6. கபீபு மன்னர் பரிசு அளித்த படலம்

கபீபு மன்னர் மனம் மகிழ்ந்தார்

திங்கள் தன்னை அழைத்த செயல்

திருநாள் தானும் போனதன்பின்

வெங்கண் கொண்ட அபூசகுல் போல்

வெந்த மனத்தார் நீங்கியபின்

தங்கம் போல மனத்தரசர்

தம்சீர் நெஞ்சால் முகம்மதுவின்

பொங்கும் புதுமை படைக்கின்ற

புனிதம் எண்ணி மகிழ்ந்தாரே! 1

எதிர்நின்று வாழ்த்தி வணங்கினார்

தோழர் சூழ்ந்து தொடர்கின்ற தூயர் நபியார் தமை நோக்கி
ஆழ அன்பு கொண்டவராம் அரிய கபீபு பேரரசர்
“வாழ்க இறைவன்” எனக்கூறி வாழ்த்தும் படைகள் குழுமி வர
ஏழை போல எதிர் நின்றே ஏத்திப் போற்றிப் பணிந்தாரே! 2

உம் மகளுக்கு உருவம் தர வேண்டுமா?

“வருக வருக” எனக் கூறி

வள்ளல் பெருமான் வரவேற்றார்

“அருள்க அருள்க” எனக் கேட்டே

அடியில் வீழ்ந்தார் அவ்வரசர்;

“அருளச் சொன்னீர் அது உங்கள்

அருமை மகளார் நோய்நீக்கும்

பொருளில் தானே சொன்னீர்கள்

புகல்க” என்றார் முகம்மதுவே! 3

இவர் எப்படி அறிந்தார்?

என்னே! என்னே! பெரும்பேறே

எய்தி விட்டேன் இந்நாளே!

தன்னே ரில்லா நபியார் என்

தவிப்புத் தன்னைச் சொன்னாரே

கொன்னே வாழ்ந்து கெட்டேனே!

கொடுமை செய்து விட்டேனே!

என்னே! என்னே!” என வருந்தி

இருக்கும் அந்தப் பொழுதினிலே; 4