செபுறயீல் நல்ல செய்தி சொன்னார்
வானோர் தலைவர் செபுறயீல்தம்
வருகை யார்க்கும் தெரியாமல்
தேனார் தீஞ்சொல் முகம்மதுவே
தெளிவாய்க் கேட்க உரைத்தார்கள்
“வானத் தூதர் பெருமானே!
வள்ளல் இறைவன் சலாம்தன்னை
நானே கொண்டு தருகின்றேன்
நல்லசெய்தி யொடும் வந்தேன்” 5
வேண்டுங்கள் தசைத்துண்டு பெண்ணாக மாறும்
“மன்னர் கபீபு கொணர்ந்துள்ள
மகளின் உருவம் சதைப்பிண்டம்
தன்னை எடுத்துக் கொண்டுபோய்த்
தாழ்ந்து வணங்கும் ககுபாவில்
முன்னே வைத்துக் கம்பளியால்
முழுதும் மூடி ஆபுசஞ்சம்
தண்ணீர் எடுத்துத் தெளியுங்கள்
தாழ்ந்து தாழ்ந்து வேண்டுங்கள்” 6
வேண்டுவதை இறைவன் தருவான்
“ஒளிசேர் இறைவா! சதைப்பிண்டம் உருவம் ஆக அருள்கஎன
எளியோர் துன்பம் களைகவென ஏங்கி ஏங்கிக் கேளுங்கள்
ஒளியான் இறைவன் உருவத்தை உடனே வரச்செய் வா”னென்றே
வளியார் வானம் போனாரே வாய்மைஉரை செய் வானோரே. 7
ககுபாவில் வேண்டினர்
பெருமான் நபியார் கோமானும் பிழையில் லாதார் நற்கபீபும்
ஒருங்கே சென்று ககுபாவை ஒட்டி அமர்ந்து கொண்டதன்பின்
“தருக தசையை” என்றார்கள் தந்தப் பெட்டி தனில்உள்ள
பெருத்த தசையாம் கட்டியினைப் பெருமான் முன்னே வைத்தார்கள் 8
வெற்றுத் தசைப்பிண்டம்
அரிய கட்டித் தசையினையே அணங்காய் மாற்றும் செய்தி வர
உரிய மக்கா மக்களெலாம் ஒருங்கே வந்து திரண்டார்கள்
தெரிய வைத்த சதைக்கட்டி சிறுகால் கையோ பெறவில்லை
விரியும் முடிகொள் தலைஇல்லை வெற்றுத் திரட்சி சதை யாகும். 9
|