வெற்றி விழாக் கொண்டாடினர்
தோல்வி காணார் தோற்றதுவும் துவண்ட மக்கள் வென்றதுவும்
மேலும் மேலும் நாற்றிசையும் மேவிப்பரந்து சென்றதுவே
காலம் தாரா வெற்றி எலாம் கண்முன் நபியால் வந்ததென
மேளதாளம் கொட்டிவிழா மேன்மையாய்க் கொண்டாடினரே! 47
அனைவரும் கலிமா ஓதினர்
“அண்ணல் தம்மைப் பார்த்ததிலே அரிய வெற்றி கண்டோமே
எண்ணற் குரிய தீன்இசுலாம் ஏற்றுக்கொண்டால் வளம்பெறுவோம்
திண்ணம் திண்ணம்” எனக்கூறித் தேர்ந்தார் அறுவர் உடனேபோய்
வண்ணமாகக் கலிமாவை வாய்மை ஒன்றி உரைத்தனரே. 48
பருசியர் வென்றனர்
இன்ன வாறு நடந்ததனை எண்ணிப் பெருமான் மனமகிழ்ந்தார்
மன்னர் பட்டம் நபிபெற்று மலர்ந்த எட்டாம் நல்லாண்டில்
அன்னவாறே உரோமியர்க்கும் அவரை எதிர்த்த பருசியர்க்கும்
நன்னர் நடந்த போர்தன்னில் நன்கு வென்றார் பருசியரே. 49
உரோமியரே வெல்வார் என்றார்கள் நபிபெருமான்
மறையைப் போற்றும் உரோமியர்கள்
மாற்றார் முன்னே தோற்றார்கள்
மறையைப் போற்றும் முசுலீமும்
மாற்றார் ஆனார் பருசியர்க்கே
முறையாய் அடுத்த பெரும்போரில்
முன்னே வெல்வார் உரோமியரே
அறைவேன் இதுவே வாய்மைஎன
அறைந்தார் அண்ணல் முகம்மதுவே. 50
அபூபக்கர் நடக்கும் என்றார்
“அஞ்சா நபியார் சொன்ன உரை அழியா தென்றார் அபூபக்கர்
மிஞ்சி மறுத்த இபுன்கலபு மிகையாய்ச் சொன்ன பொய் என்றான்;
அஞ்சிப் பருசியர் தோற்றால் அளிப்பேன் ஒட்டை நூறெ”ன்றான்
”எஞ்சும் மற்றோர் தோல்வியுறின் ஈவேன்” என்றார் அபூபக்கர். 51
|