என்துன்பம் போக ஒருவர் கூறினார்
“செய்தபெரும் பாவந்தான் கயிறாய் ஆகிச்
செய்கின்ற சிக்கல்தான்” எனவே எண்ணிப்
பெய்தவினைத் தீமைஎலாம் பின்னர் இந்தப்
பெரும்பழியாய் வந்ததுவோ? என்றும் நொந்து
நெய்த துணி நூலினது பண்பே என்னும்
நெஞ்சுடனே வழியற்று வருந்துங் காலை
பொய்கை என ஒருமாந்தர் தோன்றி என்னைப்
பொசுக்குகிற வேட்கையது தணியச் சொன்னார். 100
ஆதம் என்னும் நபியாரால் இயலவில்லை
ஆதமெனும் பேருடைய நபியார் முன்னும்
“ஆதரவு தருமாறு” கேட்டு நின்றேன்
பாதவிரல் மீதுள்ள கட்டைப் பார்த்தும்
பயனில்லை பக்குவமே சொல்லி வைத்தார்;
தீதகல வேண்டுமெனில் கட்டி வைத்த
திருமகனார் தம்மால்தான் இயலும்” என்றார்
மூதறிஞர் நபிமார்கள் பலரைப் பார்த்தேன்
முடியவிலை “முகம்மதுவால் முடியும்” என்றார். 101
முகம்மது நபியால்தான் முடியும்
முகம்மதுநன் நபியால்தான் முடியும் என்ற
முன்னத்தைக் கேட்டதும்நான் அமைதி ஆகி
அகமதனில் முகம்மதுவே உம்மை எண்ணி
ஆண்டுபல ஆண்டுபல கடத்தி வந்தேன்
நகமதனின் பிணிப்பதனால் நைந்து போனேன்
நல்லவரே! உம்பிறப்பை நல்லோர் கூறி
அகமகிழ்ந்தார் அன்னாரைப் போல யானும்
அகமகிழ்ந்தே மக்காவை நாடி வந்தேன்; 102
|