ஒருபடி சோறும் ஒரு செம்புப் பாலும்
வள்ளல்பெரு மானாரும் வந்தி ருந்த
வகையினரை வரிசைபெற அமர வைத்தார்
உள்ளவர்கள் அனைவருக்கும் குடிக்கப் பாலும்
ஒப்பில்லாச் சோற்றினையும் கொணரச் செய்தார்
தள்ளரிய ஏவலர்கள் தலைவர் இட்ட
தனியாணைப் படிசென்று கொண்டு வந்தார்
உள்ளதெலாம் ஒருபடியாம் அளவுச் சோறே
ஊற்றிடவும் ஒருசிறிய செம்புப் பாலே; 112
இருப்பது போதுமா?
இருப்பதனைப் பார்த்தார்கள் என்னே! என்னே!
இத்தனை பேர் வந்திருக்க இவருக் கெல்லாம்
விருப்பமுடன் பங்கிட்டுத் தருவதற்கு
வேண்டுமெனில் இயன்றிடுமோ? - இயலாதன்றே
ஒருத்தருணும் அளவுணவைப் பெருத்த கூட்டம்
உண்ணத்தான் கூடிடுமோ எனவே எண்ணி
வருத்தமுறத் தமக்குள்ளே பேசிக் கொண்டு
வந்திருந்தோர் ஒருவர்முகம் ஒருவர் பார்த்தார்; 113
வயிறு நிறைய அனைவரும் உண்டனர்
புதுமையினைச் செயும் நபிகள் அன்றோ ஈங்குப்
புரியுமிந்த விருந்தினிலும் புதுமை செய்வார்
அதனைநாம் அருகிருந்து காண்போம்” என்றே
அனைவருமே சரிசமமாய் அமர்ந்த வண்ணம்
எதனைஎவர் விரும்புவரோ அதனை எல்லாம்
எவ்வளவுஎன் றெண்ணத்தால் நினைத்தல் இன்றிப்
பொதுவில்அதை வைத்தெடுத்தே உண்ணலானார்
போதும்போதுமேஎன்ற அளவில் உண்டார். 114
|