பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்261


நீங்கள் முன்னர்ப் போங்கள் பின் யான் வருவேன்

நெறிதவறிச் செல்வோர்கள் நேயமற்றுச்

செய்கின்ற நிலைமை கண்டு

“குறிதவறி வாழ்கின்றார் மக்காவின்

கொடுமக்கள் கொள்கை கெட்டார்

இறைதரும்நல் அறிவிப்பைக் கேட்டவுடன்

யான்வருவேன்” இனியர் நீவிர்

முறையறியும் மதீனாமுன் சென்றடைவீர்”

எனக்கூறி அனுப்பி வைத்தார். 10

அபூசகுல் தவித்தான்

மக்காவின் மாந்தர்கள் அறியாத வகையினிலே மதீனாவுக்குத்
தக்கார்கள் எல்லாரும் தாம்போக அபூசகுல் தவித்த நெஞ்சால்
சிக்காமல் போனாரே என வருந்திச் சிந்தனையில் சிக்கி ஆழ்ந்தான்
அக்காலம் முகம்மதுதம் அன்பரொடும் அளவளாவி அமைந்தி ருந்தார்; 11

திட்டம் தீட்டினான் அபூசகுல்

வஞ்சத்து மனத்த னான வகையிலா அபூசகுல்தன்
நஞ்சொத்த நண்பர் மக்கா நாட்டவர் அனைவ ரையும்
கெஞ்சித்தான் அழைத்துக் கூட்டிக் கெடுதிசெய் திட்டம்தீட்டி
மிஞ்சத்தான் வேண்டுமென்னும் விருப்பத்தின் உச்சி நின்றான். 12

கூட்டத்தில் இபுலீசும் இருந்தான்

கூட்டிய கூட்டத் துள்ளே கொடியவன் இபுலீ சென்பான்
மாட்டிய பசுத்தோல் வேங்கை மனத்தொடு கலந்திருந்தான்
நாட்டுள அறிஞர் நன்மை நயந்திடும் அரியோர் போலத்
தீட்டிடும் தீவினைக்கே தேறிய பட்டம் பெற்றான்; 13

அபூசகுல் பேசினான்

நல்லவன் போலத் தன்னை நடத்தையில் காட்டிக்கொண்ட
புல்லிய மனமே கொண்டு பொருந்திய அபூசகுல் தான்
“வல்லோரே மக்கா வாழும் வளத்தோரே வணங்குகின்றேன்
எல்லோரும் பொருந்திக் கேட்பீர் என்னுரை” எனத் தொடர்ந்தான். 14