பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்263


சொல்லாமல் செய்தல் வேண்டும்

சொல்லித்தான் கெட்டோம் நாமே சொல்லாமல் செய்தல் வேண்டும்
வல்வித்தை கற்றான் தன்னை வகையாக அடைத்தோர் வீட்டில்
நல்குநீர் ஊணும் இன்றி நலியவே விட்டோம் ஆயின்
கொல்லத்தான் வேண்டாம் சொல்லிக் கொள்ளாமல் உயிரும் போகும்; 21

இபுலீசு வேறு வழி கூறுங்கள் என்றான்

என்றானை எதிரில் நின்ற இபுலீசு மறுத்துப் பேசி
“ஒன்றேனும் அவனைக் கொல்ல உதவாது வேறே தேனும்
நன்றான வழிகள் நாடி நவிலுங்கள்” என்று சொன்னான்
மன்றத்தோர் மனத்தை மாற்றி மயக்கிய வலிமை யோனே! 22

காட்டில் விட்டாலும் தப்பித்து மீள்வான்

“காட்டிலே விட்டால் கூடக் கருத்துடன் விலங்கை எல்லாம்
ஆட்டமே போட்டே மாற்றி அழிவின்றி ஈங்கே மீள்வான்
போட்ட நம் திட்டம் எல்லாம் புரண்டிடும்” என்று கூறி
நீட்டினான் ஒருவன் பொய்யே நிறைமனம் கொண்ட தாலே! 23

அபூசகுல் பேசினான்

யாவையும் கூறக் கேட்ட அபூசகுல் எவரும் கேட்க
நாவையே தீட்டிக்கொண்டு நவின்றனன், “வலிமையோரே!
தேவையே இல்லா தானைத் தீர்த்துத்தான் கட்ட வேண்டும்
பூவைநாம் கசக்கல் போலப் புகுந்து நாம்செய்ய வேண்டும். 24

அனைவரும் ஒன்று சேர வேண்டும்

தனித்தனியாகச் சென்று தாக்குதல் நலம் தாராது;
தனித்தவன் இருக்கும்போது தக்கோர்நம் நெஞ்சம் எல்லாம்
இனிக்கவே கத்தி ஏந்தி எல்லாரும் குத்தி மாய்த்தால்
தனித்தெவர் மேலும் கொல்லத் தாக்கியபழி தோன்றாது; 25

இயற்கையாய் நடப்பதைப் போல்

செயத்தக்க திதுவே” என்று செப்பினான் தீமை வல்லான்;
நயத்தகா இபுலீ சாங்கே நாயென வால்குழைத்தான்;
வியக்கவே செயல்முடிக்க விழைந்தனர் ஆங்குள்ளோர்கள்
இயற்கையாய் நடப்பதைப்போல் இயற்றுவோம்” என்று சென்றார். 26