பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்265


தானாக மாட்டிக் கொள்வான்

“வீணாகப் பேசா தீர்கள் விழலாகும் முயற்சி எல்லாம்
நாணாமல் செயல்செய் வானை நாம்கண்டு பிடிக்க வந்தோம்
தானாக மாட்டிக் கொள்வான் தலைவிதி நம்கையில்தான்
காணாமல் விலகோம்” என்று கனைத்தனன் இபுலீசாங்கே. 33

வீட்டைச்சுற்றி நில்லுங்கள்

கனைத்தவன் தன்னை வாழ்த்திக் கழறிய அபூசகுல்தன்
நினைப்பினை எல்லா ருக்கும் நிகழ்த்தினான், “வீட்டைச் சுற்றி
அணைத்தவர் போல நின்றால் அவன் எந்தப் பக்கம் போவான்?
அனைத்துமே நடக்கும்” என்றே அறிவித்தான் பொறாமையாலே! 34

செபுறயீல் வந்தார்

இல்லத்துள் இருந்த அண்ணல் இதயத்துள் மகிழ்வுண்டாக்க
நல்லவர் செபுறயீல்தாம் நவின்றசீர் இறைவன்ஆணை
நல்கிட வந்த நேரம் நன்னேரம் அதுவே தோன்றப்
பல்கிய கொடியோர் பக்கம் பார்வையைச் செலுத்தினாரே! 35

அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்

கொதிப்புற நின்ற வீரர் கொட்டாவி விட்டார்; தங்கள்
மதிப்பற மெய்ம்மறந்து மயங்கினார்; விழுந்தார்; ஏரி
மதிற்புறம் பிடித்துப் போட்ட வரால்மீன்கள் எனக் கிடந்தார்;
எதிர்ப்பெலாம் அடங்கி வீழ்ந்தார் எண்ணற்ற மக்கா மாரே! 36

மண்தூவிப் புறப்படுங்கள்

உறங்கியே கிடந்த மக்கள் உணர்வற வானோர் கோமான்
இறங்கியே இல்லம் புக்கார் “இனியரே! புறப்படுங்கள்
அறம்கனி அலீயார் மேலே அரும்பச்சைப்போர்வை போர்த்து
மறங்கிடந் தவர்முகத்தில் மண்தூவிப் புறப்படுங்கள்! 37

பாத்திமா அன்னையிடம் விடைபெற்றார்

மண்புகழ் மதீனா சென்று மக்களை உயர்த்து” கென்று
விண்புகழ் செம்மல் கூறி விரைந்திட, நபிகள் கோமான்
பண்புடன் வளர்த்துக் காத்த பாத்திமா தாயைக் கண்டு
நண்புடன் வந்து றங்கும் நகத்தக்க பேரைக் கண்டார். 38