பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்267


கண்ணைக் கசக்கிக் கொண்டார்

“கண்ணிலே மண்ணைத் தூவும் கள்ளனைப் போல இந்த
மண்ணிலே நம்மை வீழ்த்தி, வாயிலும் தூவி விட்டுப்
பெண்ணினும் அஞ்சிச் சென்றான் பேதையான்” என்றுகூறிக்
கண்ணையும் கசக்கிக் கொண்டு காதையும் தட்டிக் கொண்டார்; 45

எங்கெங்கும் தேடி ஓடினார்

தெருவிலும் நாடித் தேடிச் சிறுசிறு சந்தும் ஓடி
உருவினால் ஒத்தி ருக்கும் ஒவ்வொரு வரையும் நாடிப்
பெருமரக்கிளைகள் பொந்து பெட்டிகள் சாய்ந்த தட்டி
இருட்குகை எல்லாம் தேடி ஏமாந்து நின்றார் வாடி; 46

எங்கே போய் விடுவான்?

ஊருக்குள் கிடைக்கவில்லை ஊரினை விட்டுச் சென்றால்
ஆருக்கும் தெரிந்திருக்கும் ஆயினும் ஊரை நீங்கின்
நீருக்கும் அலைய வேண்டும் நிழலுக்கும் வழியே இல்லை
பாருக்குள் எங்கே போவான்? பார்த்திடு வோமே! என்றார். 47

குரங்குகள் கூச்சல் கேட்டும் குதித்தனர்

மரங்களை ஆட்டிப் பார்த்தார் மலைகளைப் புரட்டிப் பார்த்தார்
நிரம்பிய மண்ணைக் கூட்டி நின்றுமேல் ஏறிப் பார்த்தார்
குரங்குகள் கூச்சல்கேட்டும் குதித்தனர் “கிடைத்தான்” என்றே
அரங்குகள் இலாமலேயே ஆடிடும் கூத்தர் போன்றார்; 48

நாய்கள் போல் அலைந்தார்

தொலைவிலோர் கல்லைக்கண்டு “தோன்றும்அத் தலைபார்” என்பார்
இலைகளின் கிளையாட்டத்தால் ஏமாந்தும் ஏறிப் பார்ப்பார்
“வலைகளை விரிப்போம் இந்த வழியினில் கிடைப்பான்” என்பார்.
அலைகின்ற நாய்கள் போல அலைந்திடும் மாக்கள் தாமே. 49

மலைக்குகையில் தங்கினர்

அருந் “தவுர்” மலையின் கண்ணே ஆருமே புகல்இல் லாமல்
இருந்தஓர் குகையைக் கண்டார் இருவரும் ஒருவர் தாமும்;
“பொருந்திடம் இதுவே” என்று புகுந்தனர்; உள்ளிருந்தே
அருந்தவன் ஆமிறு என்னும் ஆயனின் உதவி கொண்டார்; 50