பக்கம் எண் :

322துரை-மாலிறையன்

சைபத்து வெட்டுண்டான்

பழித்துச் சொன்ன சைபத்துப் பாம்பைப்போலச் சீறி வந்தான்
“அழித்து விடுவேன்” என ஆர்த்தார் அமுசா ஆங்கே மயிலைப்போல்;
இழித்துப் பேசும் இயல்புடையோன் எண்ணம் இருண்ட சைபத்துக்
கழித்த பச்சை மரம்போலக் கையும் காலும் வெட்டுண்டான். 28

ஒலீது, அலீயாரை எதிர்த்தான்

வெட்டப் பட்ட சைபத்து வெற்றுப் பிணமாய்க் கீழ் விழுந்தான்
ஒட்டி இருந்த ஒலீதுவுடன் ஓங்கு சினமே பெற்றவனாய்க்
கட்டி வைத்த காளையது கட்ட விழ்ந்த நிலைபோலத்
தட்டித் தோள்கள் ஆர்ப்பரித்துத் தாக்க வந்தான் அலீயினையே! 29

பாவக் குன்றின் மேல் நின்றான்

“அற்பப் புழுவே! அலீயே நீ! அரிமா என்முன் பொர வந்தாய்
நிற்பா யாகில் ஒழிந்தாய் போய் நின்றன் தலைவன் முகம்மதுவை
நிற்கச் சொல்வாய் என்முன்னே நேர்நீ சமமோ?” எனக்கூறிப்
பற்கள் கடித்தான் நொறுங்குதல்போல் பாவக் குன்றின் மேல்நின்றே! 30

முகம்மதுவை இகழாதே!

எதிரில் நின்ற அலீயாரோ இகழ்ந்த ஒலீது தனைநோக்கிக்
“குதிர்மண் குழியாம் தீவினைக்குள் குதித்து வீழ்ந்து மாள்கின்றாய்;
கதிர்போல் எழுந்த முகம்மதுவின் கவினார் ஒளியை இகழ்கின்றாய்;
உதிரப் போகும் இந்நிலையில் உரைசெய்யாதே போ” என்றார். 31

அலீயார் இறைவனைத் தொழுதார்

அறத்தின் வலிமை அறியாமல் ஆர்த்த ஒலீது புகழில்லா
மறத்தின் வழியே தானின்றான்; மன்னர் நபியார் முகம்மதுவின்
திறத்தின் நெறியார் அலீயாரோ தெய்வச் சிந்தை உடையவராய்ப்
புறத்தின் வலிமை எலாம் மறந்து புகழோன் துணையே நினைந்தாரே! 32

ஒலீது விழுந்தான் உதுபத்து எழுந்தான்

ஒலீது பட்டு வீழ்ந்தவுடன் உதுபத் தெழுந்தான் உதைபடவே
பொலியும் உபைதா போர்க்களத்தில் பொல்லான் உதுபத்து எலியின்முன்
புலியே போல எதிர்த்தாலும் போரோ முடிந்த பாடில்லை
அலீயும் அமுசா வல்லாரும் அரிய துணையாய் வந்தார்கள். 33