பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்325


இறைஉரை இறங்கியது

ஓங்கி எறிந்த வாளால் நல் உணர்வில்லாதான் தலைகொய்து
தாங்கிப் பிடித்துக் கொண்டுடலைத் தரைமேல் வீழ்த்தி முகம்மதுவின்
வீங்கு புகழ்முன் நேர்வந்து வெற்றுத் தலையைக் காட்டியதும்
ஆங்கு விண்ணின் திருமொழியை அண்ணல் தாமே கேட்டார்கள்; 46

இனி இசுலாம் தழைக்கும்

புல்லன் ஆன அபூசகுல் இப்புவியில் வீழ்ந்தான்; அதனாலே
அல்ல புரியும் குறைசியர்கள் ஆற்றல் முதுகு முறிந்ததுவே;
நல்ல இசுலாம் நெறி ஓங்கி நல்லுலகெங்கும் பரவுமெனச்
சொல்லக்கேட்ட இறை உரையைத் தொழுது நபியார் மனமகிழ்ந்தே; 47

மதினாவில் றுக்கையா ஆவி பிரிந்தது

வெற்றிச் செய்தி தனைஎழுதி விடுத்த மடலைக் கொடுவந்த
ஒற்றர் மதினா வந்திடவும் ஒளிசேர் மகளாம் றுக்கையா
குற்றம் இல்லா உயிர்நீங்கிக் கொழுவான் அகமே படர்ந்திடவும்
உற்ற இன்ப துன்பமெனும் உணர்வில் மதீனா மூழ்கியதே! 48

துல்ஃபிகார் வாளோடு பெருமான் புறப்பட்டார்

இன்பம் துன்பம் இரண்டினையும் இயல்பாய் எண்ணும் உயர்நெறியார்
வன்போர் அதனில் தாம்பெற்ற வாள் துல்ஃபிக்கார் என்பதனை
அன்பால் ஏந்தி மதினாவை அடைய எண்ணிப் புறப்பட்டார்
பண்பால் வென்ற முந்நூற்றுப் பதினால்வர் தம் திறன் புகழ்ந்தே; 49

இருவர் தலைகளைத் தகர்க்க ஆணையிட்டார்

பிடித்த வீரர் எழுபஃது பேர்கள் தமக்குள் நலுறு உகுபத்(து)
எடுத்த முயற்சி எல்லாமே இசுலாம் நெறிக்கே எதிர்அதனால்
தடித்த இருவர் தலையினையும் தகர்க்க ஆணை இட்டார்கள்
அடுத்து நின்றோர் தமைஅன்பால் அடங்கி நடக்கப் பணித்தார்கள். 50

ஒருவர் பத்துப் பேர்க்குக் கல்வி அளிக்கவேண்டும்

பகைவர் தமக்கும் அருள்வழங்கும் பண்பால் உற்ற பகைவர்களைத்
தொகைப்பொன் தந்து மீட்டிடலாம் தொடர்ந்து கையில் பொருளற்றார்
வகைக்குப் பத்துப் பேர்களுக்கு வற்றாக் கல்வி அளிப்பதுவே
தொகைக்குச் சமமாம் எனஆங்கே தோன்றல் பெருமான் அறிவித்தார். 51