பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்333


உமறு இப்னு கத்தாபு மகிழ்ந்தார்

கைம்பெண் ஆன யபுசாதம் கலக்கம் போக்கிக் காத்திடவும்
நம்பும் நல்லோர் உமறுஇப்னு கத்தா புள்ளம் மகிழ்ந்திடவும்
ஐம்பொற் பாவை அன்னஒளி யபுசா என்னும் குலவிளக்கைப்
பைம்பொன் மேனி நபியண்ணல் பரிவே காட்டி மணந்தார்கள். 36

சௌதா அபிசினியா சென்றார்

பெண்கள் குலத்துத் திருவிளக்கின் பெயரோ சௌதா என்பதுவே
கண்கள் இரண்டும் கருணையினால் கனிந்த படியே பெற்றவராம்
கொண்க னோடும் குழந்தையொடும் கொண்ட இசுலாம் கொள்கையினால்
புன்கண்இலாத அபிசினியா புதுமண் சென்று வாழ்ந்தார்கள்; 37

மீண்டும் மக்கா வந்தார்

மக்கா மண்ணில் அமைதிஎன மற்றோர் கூறக் கேட்டவுடன்
தக்கார் எல்லாம் ஒன்றாகித் தம்மண் நோக்கி நடந்தார்கள்
அக்கால் சௌதா அம்மையரின் அரிய கணவர் இறைநெறியே
மிக்கார் பொலியும் விண்ணாட்டை மேவிச் சென்றார் அந்நாளே! 38

குழந்தையொடு சௌதா தவித்தார்

கையில் கனிந்த குழவியொடும் கருத்தில் இசுலாம் கொள்கையொடும்
வெய்யில் வீழ்ந்த புழுப்போல வேதனையுள் வீழ்ந்தவராய்ப்
பெய்யும் பருவப் புதுமழைபோல் பெருமக் காவைத் தாமடைந்தார்
ஐயன் தவிர எவருள்ளார் அரவணைத்துக் காத்திடவே! 39

எள்ளி நகையாடினர்

பொய்யை நாடிப் போனாளே பொல்லாப் பேதை தன் கணவன்
கையைப் பற்றிப் போனாளே கைம்பெண்ணாகி வந்தாளே
வைய வாழ்வை இழந்தவளை வாட்டி வதைப்போம் எனப்பலவாய்
வெய்ய உரைத்த மக்காத்தீ வினையார் முன்பெண் துயருற்றார்; 40

நாயகம் தாமே மணக்க முடிவு செய்தார்

முப்பதாண்டே நிறைவுற்று மூவா சௌதா நங்கையினை
ஒப்ப தில்லாத் தீயுரையால் உலையச் செய்த மக்கள்முன்
தப்ப தில்லாத் தகு நபியார் தாங்கி நலமே தரஎண்ணிச்
செப்பிப் புகழும் திருமணமே செய்து கொள்ள நினைத்தார்கள். 41