பக்கம் எண் :

336துரை-மாலிறையன்

/p>

புதல்வன் அனசு மூன்று அப்பம் கொண்டு வந்தார்

அப்பத் துண்டு மூன்று தமை அடுக்கி மகனாம் அனசுவிடம்
ஒப்பத் தந்தே உடன்போய்நீ ஒளியோர் தம்மை உணச்செய்வாய்
இப்போ திவையே உள்ளவென இயம்பி வருவாய்” எனச் சொல்லத்
தப்பில்லாத பிள்ளையவன் தாவி ஓடிப் போய்த் தந்தான். 54

மூன்று அப்பம் போதாவே

எட்டுப் பத்துத் தோழர்கள் ஈங்கே இருக்க மூன்றப்பம்
பிட்டுப் பிட்டுத் தந்தாலும் பெருகு பசிநோய் தீர்க்காவே
தட்டுத் தட்டாய் இருந்தால்தான் தரலாம் பசியும் போகுமென
மட்டில் லாமல் இறைஅன்பே மல்கு பெருமான் நினைத்ததன்பின்; 55

அனசைப் பின்தொடர்ந்து போனார்கள்

தம்பி அனசே! வந்தாயோ? தந்தை அப்பம் தந்தாரோ?
நம்பிக் கையில் சிறந்தாரை நானே காண வருவனெனச்
செம்பில்லாத பொன்போன்ற செம்மல் நபியார் கூற உடன்
எம்பிக் குதித்துப் போனான்சேய் எல்லாம் அவனைப் பின்தொடர்ந்தார் 56

“சயது” என்பவரே அபூதல்கா ஆவார்

உற்றசெல்வக் குவைஎல்லாம் ஒளியார் பெரிய நெறி போற்றிக்
குற்ற மற்ற ஏழைக்கே கொடுத்த சயது தம்பேரே
அற்றார் தம்மைக் காக்கின்ற அபூதல்கா நற்பேராகும்
சற்றும் எதிரே பாராமல் தம்மோர் வந்தார்” எனக்கண்டே; 57

ஐயன் வந்தாரே!

கையும் காலும் புரியாமல் கருத்தில் மகிழ்வே நிறைவெய்த
ஐயன் வந்தார் வந்தாரே ஆர்க்கும் இதுபோல் கிட்டாதே
மெய்யன் புடையார் எனக்கூறி மேனி சிலிர்த்து மனைவியிடம்
“கையில் உள்ள உணவைஎலாம் கரவா தளிப்பாய்” எனச்சொன்னார். 58

என்ன செய்வது?

துணைவர் சொன்ன சொல் கேட்டுத் துயரம் மிக்க தூயவரும்
முனைவர் நபிகள் நாயகமோ முழுதும் எல்லாம் அறிவார்கள்
மனையில் உள்ள அப்பங்கள் மறைவில் இல்லை மூன்றேதாம்
எனவே சொன்னார்; நல்லாரும் என்செய் வதுவோ? என நினைத்தார். 59