பக்கம் எண் :

338துரை-மாலிறையன்

3. உகுதுப் போர்ப் படலம்

அபாசுபியான் வஞ்சகம் வளர்த்தான்

நஞ்சினும் கொடிய தாக நாவுள அபாசு பீயான்
வெஞ்சினம் கொண்டு தன்னை விழைந்தமக் காவின் மக்கள்
பஞ்செனும் நெஞ்சம் மேவிப் பக்கத்தில் சூழ்ந்திருக்க
வஞ்சினத் தீச்சொல் வீசி வளர்த்தனன் பகைமைத் தீயே! 1

மக்கா மக்களே விழிப்படையுங்கள்

மக்காவில் வாழ்கின் றோரே! மகம்மது தீமை வெல்ல
முக்காலும் முயற்சி செய்தும் முடியாமல் தவிப்புக் கொண்டோம்;
அக்காலம் பதுறுப் போரில் அருமானம் இழந்து போனோம்
இக்காலம் பழியைப் போக்க எல்லாரும் முயல வேண்டும். 2

இவன் புதுப்பிறப்பு எடுத்தவனோ?

ஈராக்கில் ஈட்டி வந்த இரும்பொருள் கவர்ந்து கொண்டான்
கூராக்கிக் படைக் கலன்கள் கொண்டுபோர் செய்து வென்றான்
சீராக்கி வைத்த நந்தம் செழுமரபெல்லாம் தீய்த்தான்
போராக்கித் தழைப்பதற்கே புதுப்பிறப் பெடுத்திட்டானோ? 3

உணர்ச்சித் தீ ஏற்றினான்

பல்லோராய் இருந்தும் கூடப் பயனில்லை வீரம் பேசும்
சொல்லோராய் வாழ்ந்து கெட்டோம் சுரணைஇல் லாமல்போனால்
வல்லோராய்ப் பகைவர் வாழ வளமெல்லாம் இழந்து போவோம்
எல்லோரும் எழுக” என்றே ஏற்றினான் உணர்ச்சித் தீயே! 4

வாய்மையைத் தூற்றினார்

எந்தையாம் அபூசகுல்மேல் இயம்புவேன் ஆணை” என்றே
தந்தையை இழந்த மைந்தன் தகாஇகு ரிமா எழுந்தான்;
சிந்தையில் நலமில்லாமல் செப்பிடும் “கலப்பின்” மைந்தன்
வந்தனன் “உபை” என் பான்நல் வாய்மையைத் தூற்று தற்கே! 5