பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்341


நாம் பேருக்கு வீரர் இல்லை

ஊருக்குள் இருந்து கொண்டே உயிர்காத்துக் கொள்ளல் வேண்டா
போருக்குள் புகுந்திருக்கும் புல்லியோர் கூட்டம் தன்னை
நேருக்கு நேராய்ச்சென்று நெருங்கியே சாய்த்தல் வேண்டும்
பேருக்கு வீரராநாம் பெருமானே!” என்றார் அன்பர்; 18

அண்ணலார் அரும்பண்பு

மற்றவர் கருத்தினையும் மதித்திடும் செம்மலாரும்
உற்ற போர்ப் படைகள் தாங்கி உணர்வொடும் எழுந்து வாழ்வில்
குற்றமே நெறிய தாகக் கொண்டபொய்க் குலத்தினாரை
அற்று வீழ்ந் திடவே செய்ய அப்போதே அணிய மானார். 19

தோழர்கள் தவறுணர்ந்தனர்

உள்ளுக்குள் இருந்து கொண்டே ஊரினைக் காப்போம் என்ற
சொல்லுக்கு மதிப்பில்லாமல் சொல்லியோர் தவறுணர்ந்து
மல்லுக்கு நாமே செல்லல் மாண்பில்லை என்று சொன்னார்
சொல்லுக்குக் கட்டுப்பட்ட தோன்றலோ தோழர் முன்னே; 20

வென்றுதான் திரும்ப வேண்டும்

போரிட அணிய மானோம் புறமுது கிடுதல் இல்லை
கூர்இடும் அம்பு வில்லின் கூன்விட்டுப் பாய்ந்து விட்டால்
சேர்இடம் சேர்ந்த பின்தான் சிறப்பிடம் பெறுதல் போல
வீரர்நாம் விழைந்து விட்டோம் வென்றுதான் திரும்பல் வேண்டும். 21

போர்ப்படை கிளம்பிற்று

“எழிலான மதினா வைநம் இபுனுஉம்மி மகதூம் காப்பார்
தொழுகையை முடித்துக் கொண்டு தோள்களை உயர்த்தி நாம்போய்
விழுமிய வெற்றி காண்போம் வீரரே எழுக” என்றார்
புழுதிகள் வானைத் தாவப் போர்ப்படை எழுந்த தாங்கே! 22

அன்பரோடு அரும்பண்புகளும் சென்றன

பொருபடை செல்ல முன்னே புகழ்க்கொடி “உகாபு” செல்லப்
பெருமையும் உரனும் அன்பும் பீடுடன் நெருங்கிச் செல்ல
அரும்புணர் வுடைய விண்ணின் ஆற்றலும் அணைத்துச் செல்ல
அருளொடும் அகத் தூய்மையும் அவிர்ஒளி பரப்பிச் செல்ல; 23