பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்359


எல்லாச் செல்வத்தையும் இழந்தேன்

பெற்ற செல்வம் அத்தனையும் பின்னால் எவர்க்கும் உதவாதாம்
குற்றம் இல்லா அல்லாவே கூறுகின்றான் எனக் கூறி
உற்ற செல்வம் அத்தனையும் ஊராருக்கே தரச் சொன்னான்
சற்றும் எண்ணிப் பாராமல் தந்தேன் தந்தேன் தந்தேனே! 24

இன்னும் செல்வம் கேட்கின்றான்

முற்றும் இழந்து வறியேனாய் முழுதும் கெட்டேன் என்றாலும்
வெற்றாளாகி விழிக்கின்றேன் வினையை நொந்தே என்றாலும்
சுற்றிச் சுற்றி அக்கொடியோன் சோதனையே செயச் செல்வம்
வற்றி விட்ட என்னிடத்தில் வறியோர்க் கின்னும் கேட்கின்றான்; 25

தொல்லை பொறுக்க முடியவில்லை

தொல்லை பொறுக்க முடியாமல் தொகையான் தரவும் இசைவுற்றேன்
எல்லை இல்லாப் புகழோய்! உம் இதயம் கனியக் கேட்கின்றேன்
புல்லை மேயும் மாட்டுக்குப் புதுவைக் கோலைப் போடுதல்போல்
இல்லை என்று கூறாமல் ஏதோ கொஞ்சம் தரநினைத்தேன்; 26

கொஞ்சம் கடன் கொடுங்கள்

கொஞ்சம் பொருளே கொடுத்திடவும் கூட எனக்கு வழியில்லை
நெஞ்சம் மாறி வந்து விட்டேன் நெடிய என்றன் உறவோடும்
நஞ்சம் கொண்டோன் அவன்நட்பை நல்கும் பொருளால் ஒழித்திடுவேன்
கெஞ்சும் கடனாய்க் கேட்கின்றேன் கிடையா தென்றே உரையாதீர்; 27

பத்துக் கலம் நெல்தந்தால் போதும்!

ஒத்து வந்தோர் நிழல்கேட்டால் உவகை கொண்டு மறுக்காமல்
முத்துப் பந்தர் போட்டவரை முழுதும் காக்கும் பெரியோரே!
பத்துக் கலங்கள் நெல் தந்தால் பாவி கடனைத் தீர்த்திடுவேன்
செத்துத் தொலைந்தும் இனிஅவன்பால் சேரேன் சேரேன்” எனச்சொன்னார்.28

கடன் தருவேன் மனைவியைப் பிணை வையுங்கள்

உறுதி கேட்ட ககுபு உள்ளம் உவகை கொண்டு, “முகம்மதுவே!
அறுதி இட்டுக் கேட்கின்றீர் அட்டி இன்றித் தந்திடுவேன்
பெறுதி; வட்டி தரவேண்டாம் பெண்டாள் தன்னைப் பிணை வைப்பீர்!
இறுதி யாகக் கடன் கேட்டீர் இதைநான் செய்வேன்” என்றானே! 29