பக்கம் எண் :

360துரை-மாலிறையன்

உம்மகனையாவது பிணை வையுங்கள்

அறிவில் லானின் சொல்கேட்ட அரியோர், “பெரியோய்! நீர்சொன்ன
செறிவில் லாத கருத்துதனைச் சிறிதும் உலகம் ஏலாது
வறியோர் கூட ஒப்பார்கள் வாடச் சொன்னீர்” என “உன்றன்
சிறியோர் புதல்வர் தாம் எனினும் சிறந்த பிணைதாம்” எனச்சொன்னான். 30

எவர் புதல்வனை அடகு வைப்பார்?

அதிரச் சொன்ன அவன் கருத்தை அகத்தில் ஏற்ற நெடியோரும்
“புதுமை யாகச் சொல்கின்றீர் புதல்வர் தம்மை எவரேனும்
வதைய அடகு வைப்பாரா? வையம் பழித்துச் செப்பாதோ?
இதயம் நடுங்கச் சொன்னீரே எனினும் இது நான் சொல்கின்றேன் 31

விலை உயர்ந்த வாளை அடகு வைப்பேன்

விலை இல்லாத வாள்ஒன்றை வீட்டில் யானும் வைத்துள்ளேன்
அலைவார் மக்கள் பகற்போதில் அதைத்தான் எவரும் காண்பாரேல்
நிலையாப் பகல்போய் இருள்வந்தால் நெருங்கி வந்து யானதனை
மலைபோல் மாண்பே உடையவரே! மறைவாய்த் தருவேன்” எனச்சொன்னார்.32

இருட்டு வேளையில் வாளுடன் வந்தார்

ஒப்புக் கொண்ட தப்புடையோன், ஒப்பில்லாத வாள் பெறவும்
அப்போ தேசெந் நெல்தரவும் அணியமானேன் எனச் சொன்னான்
செப்பிச் சென்ற முறைபோலச் செம்மையோரும் வாளுடனே
கப்பும் இருள்சூழ் வேளையினில் ககுபு தன்முன் வந்தார்கள். 33

ககுபு நறுமணம் பூசி வெளியே வந்தான்

தடுத்துச் சொன்ன மனைவியவள் தரும் எச் சரிக்கை கேளாமல்
உடுத்த உடைமேல் நறுமணமே ஓங்கும் பனிநீர் எலாம்பூசி
எடுப்புமிக்க மிடுக்கோடும் ஏகிச் சென்றான் ககுபாங்கே;
கொடுக்கும் அந்த வாளுடனே குழைந்து நின்ற சல்மாசேய்; 34

ஆ! ஆ! எத்தகைய நறுமணம்

“ஆ! ஆ! என்ன நறுமணமே! அடியேன் உள்ளம் கவர்ந்திடுதே
பூவார் இந்த உலகில்உள புகழ்ப்பூ எதற்கும் ஈதிலையே!
நாவால் இந்த நறுமணத்தின் நன்மை எவ்வாறு இயம்பிடுவேன்?
போவார் வருவார் தமைக்கூடப் புகழ்ந்து கூறச் செய்திடுதே” 35