பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்361


குருதி பாயக் குத்தினார்

என இவ்வாறு புகழ்ந்துடனே எண்ணிவந்த வினைபுரிய
மனமே மயங்கிச் செல்வார்போல் மணமில் மனத்தான் அருகில்போய்
மணமே மோந்து பார்ப்பார்போல் மறைவாய் வைத்த கத்தியினால்
சினமே ஓங்கக் கொடியோனின் செந்நீர் பாயக் குத்திட்டார். 36

இச்செயலை அண்ணலார்க்கு அறிவிக்க விரைந்தார்

குத்திட்டவுடன் அக் கெட்டோன் குலைவுற்ற வனாய்க் கீழ் வீழ்ந்து
கத்திட்டவுடன் உயிர்விட்டான் “கருதிட்டது போல் செய்திட்டோம்
எத்திட்டமுடன் வந்தோமோ இருந்திட்டதையே முடித்திட்டோம்
செத்திட்டவன் இச்செய்தி தனைச் சேர்ப்பித்திடுவோம்” என மகிழ்ந்தார்.37

நபிக்கோமான் முன் சென்றார்

தாய்மை பொலிந்த தனித்தமிழின் தகுதி மறந்து பழிப்பாரை
வாய்மை உணர்வு மிகுதமிழர் வகையாய் வென்று மகிழுதல்போல்
நோய்மை கொண்ட ககுபுவினை நொடியில் வீழ்த்தி நபிக்கோமான்
நேய முறவே எதிர்சென்று நிறைந்த மகிழ்வால் நின்றனரே! 38

காய் நெஞ்சவனைச் சாய்த்துச் சென்றார்

தூய்மை யான உயர்தமிழைத் தூக்கி எறிந்து பகைப்பாரின்
தீமை அழித்து மகிழ்கின்ற செந்தமிழர்போல், எங்கெங்கும்
வாய்மை நெறியே பரவிவிட வந்த அல்லா அன்பர்முன்
காய்நெஞ் சவனைச் சாய்த்துப்பின் களிப்பே கொண்டு சென்றனரே! 39

வள்ளல்முன் போய் நின்றார்

தொன்மை யுடைய தமிழ்மொழியின் தோற்றம் அறியாக் கயவர்தம்
புன்மைச் செயலைப் புறங்கண்டு புதுப்பேரின்பம் அடைபவர்போல்
நன்மை யில்லாக் ககுபுதனை நாடிக் கொன்ற சல்மாவின்
வன்மை மைந்தர் முகம்மதுவாம் வள்ளல் முன்போய் மகிழ்ந்தனரே! 40

வான்தூதர் முன்போய் நின்றார்

இளமை குன்றா எழில்தமிழை இழிந்த மொழியாய்ப் புறம்பேசும்
களர்போல் நெஞ்சம் கொண்டவரைக் கவிழ்த்து வென்று களிப்பார்போல்
உளமே இருண்ட ககுபுவினை ஓங்கு வீரர் வென்றவுடன்
வளமை வானின் தூதர்முன் மகிழ்ந்து சென்று கண்டனரே! 41