அண்ணன் அப்துல்லா தனக்கு எத்தீமையும் செய் என்று கூறல்
இத்தன்மை உரைகூறிச் சிறுவரெலாம்
இருவரையும் இரங்கி வேண்ட
முத்தின்மெய் ஒளிகொண்ட அப்துல்லா
முன்வந்து முறையாய் நின்றே
எத்தீமை செயவந்தீர் என்றாலும்
இப்போதே எனக்குச் செய்க
சத்தின்மை உடையதுஇந்தப் பிள்ளையினைத்
தக்கவரே விடுப்பீர்” என்றான். 16
நெஞ்சகத்தைக் கீறினார்
இன்னலறச் சிறுவர்கள் எல்லாரும்
கூடியங்கே இயம்பும் போதில்
மின்னலுறும் செபுறயீல் மிக்காயீல்
விண்ணொளிசெய் மேனியார்கள்
நன்னலஞ்செய் முகம்மதுவை மரஞ்செறிந்த
நறுநிழலில் படுக்க வைத்துச்
சின்னஉர மார்பதனைச் செங்கையுறும்
கூர்படையால் கீறி னாரே! 17
நெஞ்ச மாசினை அகற்றினார்
நெஞ்சுபதை பதைக்கஎதிர் பாரா வண்ணம்
நிகழ்ந்ததனை நேரில் கண்டு
பஞ்சுபறப் பதைப் போலச் சிறுவர்அஞ்சி
நாற்றிசையின் பக்கம் ஓட
நெஞ்சுதனை இருகூறாய்ப் பிளந்ததனில்
உளமாசு நிலையைப் போக்கி
மிஞ்சுநல மேன்மைஎனும் நினைவுகளை
இதயத்தில் மிளிரச் செய்தார்; 18
|