பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்367


அபூபக்கர் மணக்க விரும்பினார்

புலம்பெயர்ந்த நான்காண்டில் போரில் கணவர் சாய்ந்தவுடன்
நலம் புணர்ந்த இவர்தம்மை நாடி விரும்பி அபூபக்கர்
வலம் சிறக்க மணந்திடவே வருந்திக் கேட்டார் அம்மணியோ
நிலம் சிறக்க வந்த நபி நீர்மை தனையே விரும்பினரே! 72

திருக்குர் ஆன் ஓதும் குரல் இனிமை உடையவர்

குயிலே போன்ற குரலினிமை கூவு கின்ற மயிலே! யான்
கயலே போன்ற உன்கண்ணின் கனிவால் ஒன்று கேட்கின்றேன்
அயலே வந்த நின்றனையான் அன்பால் மணக்க விரும்புகின்றேன்
இயலும் என்றால் கூறுகென்றார் இறைவன் தூதர் முகம்மதுவே! 73

முகம்மதுவை மணக்கச் சம்மதித்தார்

குடையாய் முகிலைக் கொண்டவர்தம் குறிப்பே அறிந்த கொள்கையினால்
தடையே இல்லை என்பதனைத் தம்நா உரையால் கூறாமல்
இடையே இல்லை எனும்சல்மா இனிதாய் உதிர்த்த புன்னகையால்
உடையோர் நீரே எனக்கூறி உவந்தேற் றார்கள் மணத்திற்கே! 74

பாத்திமாவுக்கு உசைன் பிறந்தார்

பெருமான் மகளார் பாத்திமாவின் பெருமைக் கேற்ற வழிமுறையில்
திருமாண் புடைய புதல்வரெனும் செல்வர் பிறந்தார் அன்னவரை
அருவான் தூதர் முகம்மதுவும் அரிதாய்த் தூக்கி நலம் சேர்த்துத்
திருவான் நெறியின் முறை கூறிச் செப்பி மகிழ்ந்தார் “உசைன்” எனவே; 75

அலீயார் அன்னை பாத்திமா மறைவு

அலீயார் தம்மை ஈன்றளித்த அரிய அன்னை பாத்திமாவும்
நலிந்தார் உடலம் சோர்வுற்றார் நல்லோர் தந்த இசுலாமின்
கலிமா ஓதும் கடமையினார் காதால் கேட்கும் திருக்குர்ஆன்
ஒலியே இறைவன் பொருள் என்றே உயிரும் விடுத்தார் ஒப்பில்லார்; 76

முகம்மது நபி தம் அன்பை வெளிப்படுத்தினார்

தாயை அணைத்து முகத்தோடு தம்சீர் முகத்தைப் பதித்து அன்புச்
சேயின் பெருமை நிலைநாட்டிச் சிறப்புச்செய்து, வாழ்வெல்லாம்
நோயும் நொடியும் இல்லாமல் நொடிப் போதினிலும் அயராமல்
நேயத்தோடு காத்தவரே! நெகிழ்பேர் அன்பை வளர்த்தவரே! 77