பக்கம் எண் :

370துரை-மாலிறையன்

பிற்பகல் தொழுகையில் பார்த்துக் கொள்வோம்

வேளை தோறும் தொழுகின்ற வீணர் மேலும் பிற்பகலில்
தோளைத் தலையை மண்தாழ்த்தித் தொழுகை செய்யப் போகின்றார்
வாளை ஏந்தி வந்துள்ளோம் வாய்ப்பு மேலும் உள்ளதெனக்
காளை ஒருவன் கருத்துரைக்கக் கத்து பான்ஒத் திருந்தார்கள். 6

இறைவன் ஆணை வந்தது

இறையை மறுப்பார் எண்ணத்தை இறைவன் அறியா திருப்பானோ?
மறைவான் உரையை மணிநபியார் மனத்தில் தோன்ற அருள்செய்தான்;
நிறைவாய்த் தொழுகை மேற்கொள்ளும் நெகிழ்மா மனத்துப் பொன்னபியே!
கறைவாய்ப் பட்டோர் படைகளொடு காலம் பார்த்து நிற்கின்றார்; 7

உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

படைகள் தம்மைப் புறம் வைத்துப் பணியும் தொழுகை மேற்கொண்டால்
தடைகள் இன்றி அவர்நும்மைத் தாக்கி வென்று விடுவார்கள்
கொடைகள் தருவேன் என்றாலும் குருதி சிந்தா வண்ணத்தில்
குடைபோல் நல்ல தற்காப்புக் கொளவே உரையான் செய்கின்றேன்; 8

இருபிரிவாகப் பிரிந்து தொழுகை செய்க

பகுதி இரண்டாய் ஆகுங்கள் பகுதி ஒன்று தொழும் போதில்
மிகுதி வீரர் படையேந்திப் மிகவும் பொறுப்பாய்க் காத்திடுங்கள்
தகுதி யாகத் தொழுதேபின் தக்கோர் தொழுகை முடித்திடுங்கள்
பகுதி பகுதி ஆனாலும் படைக்கலத்தைப் பிரியாதீர்! 9

தப்பித்து ஓடினார்கள்

இதுவே இறைவன் உரையாக இனியோர் எல்லாம் அவ்வாறே
புதுமேன் முறையில் தொழுதார்கள் பொல்லா தவரோ இதைக்கண்டே
இதன்மேல் நாம்இங் கிருந்துவிடின் இறுதி யாவோம் உயிர்ஒன்றே
முதுமை வேண்டும் எனஎண்ணி முண்டி அடித்து(ஆங்கு) ஓடினரே! 10

போரில் வென்று நபி அண்ணலார் திரும்பினார்

செத்தோம் செத்தோம் எனக் கத்திக் கத்து பான்கள் போயினபின்
முத்தோய் வெடுக்கும் முகமதியார் முழுவீ ரத்துப் படையோடும்
ஒத்து ஆய்ந் ததன்பின் மதினாவை உறவே நோக்கி வரும்போது
முத்தாய்க் காலில் கொப்புளங்கள் முகிழ்க்கும் பாலை கடந்தார்கள் 11