பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்381


ஆயிசா அன்னை ஒதுங்கச் சென்றார்

அன்பர் படைகள் இளைப்பாற ஆங்கோர் இடத்தில் அமர்ந்தவுடன்
பண்பே உருவாய் ஆனஎழில் பாவை ஆயி சாநல்லார்
பின்போர் பக்கம் ஒதுங்கிவரப் பிறர்இல் லாத இடம்போனார்
கண்பார் வையை மறைத்துவிடும் கங்குல் போதும் வந்ததுவே! 12

கழுத்தணிமாலை தொலைந்து விட்டது

தூய கற்பு மாறாநல் தோகை மயிலார் ஆயிசா பொன்
தாயர் கழுத்தில் அணிந்தஒரு தகுபொன் மாலை காணாமல்
ஆய இருட்டின் வெளிஎல்லாம் அலைந்து தேடிக் களைத்ததன்பின்
நேய முடைய நபியார்முன் நெருங்கி வந்து சொன்னார்கள். 13

காலையில் தேடலாம் என்றார்

உள்ளங் கையின் கோடுகளுள் ஒன்றும் தெரியா இவ்விருளில்
பள்ளம் மேடு நிறைந்துள்ள பாலையில் பொன் மாலைவிழுந்(து)
உள்ள ததனை எவராலும் உணர இயலா தெனச் சொன்னார்
வள்ளல் நபியார் என்றாலும் வரும்நற் காலைப் பொழுதென்றே; 14

நீரற்ற வறண்ட பாலை

கூறி அந்தப் பாலையிடைக் கூட்டத் தோடும் தங்குகையில்
மாறி மாறி வெயில்ஒன்றே வந்து போகும் பாலை யதில்
நீறே இருக்குமே அன்றி நீரே காண இயலாதே
ஆறே போல மணலிருந்தும் அதனுள் நீரும் சுரக்காது; 15

உலு செய்து தொழுகை நடத்தல் இயலாதே!

இந்த இடத்தில் நாம் தங்கி இருந்தால் தொழுகை நடக்காது
முந்தி உலுசெய் முறைஎல்லாம் முகத்தில் செய்தல் எவ்வாறு?
சிந்தி யாமல் இவ்விடத்தில் செம்மல் தங்கச் சொன்னாரே
நொந்தும் இனிஎன் பயன்என்று நுவலும் கவலை தோன்றிடவே; 16