பக்கம் எண் :

394துரை-மாலிறையன்

“விருந்துண்ண வருக” என்றார்

அவ்வகை அன்பு கொண்டோர் அரியவர் முன்னர்ச் சென்று
பவ்வமே போலத் தோண்டும் பணிசெய்து களைத்தீர் இன்று
செவ்வணம் நீரும் தங்கள் திகழ்மனத் தொண்டர் தாமும்
வெவ்வியல் பசிநோய் தீர விருந்துண்ண வருக” என்றார். 36

சமைக்காமல் ஊன், மாவைக் கொணர்க

“சமைத்துண்ண வருக என்னும் சாபிரே! விரைந்து சென்று
அமைத்துள்ள ஊனை, மாவை ஆங்குநீர் சமைத்தி டாமல்
இமைப்போதில் கொணர்வீர்” என்றார். இனியரும் ஏகி ஊன்மா
தமைக்கொண்டு தலைவர் முன்னே தாழ்ந்து வைத் தருகில் நின்றார். 37

உடனே சமையுங்கள் என்றார்

கண்டனர் அவற்றைக் கண்ணால் களைப்புடன் அருகிருந்த
தொண்டரார் தம்மை நோக்கித் “தூயரே! நேய முற்றார்
கொண்டுவந் திருக்கும் அன்பு கூடிய ஊனை மாவை
உண்டுவந் திருக்கும் வண்ணம் உடன்சமைத் திடுக” என்றார்; 38

எல்லாரும் பசியாற உண்டனர்

மாவினைப் பிசைந்து நல்ல மணம் கமழ்கின்ற அப்பம்,
தாவின பசித்தோர்க்கெல்லாம் தந்தனர் முதலில் முன்னர்க்
கூவின ஆட்டின் ஊனைக் கொழுஞ்சுவை யோடு கூட்டி
மாவினைத் தொண்டர் எல்லாம் மகிழ்ந்துடன் தின்ற போதும்; 39

ஊனும் மாவும் அப்படியே இருந்தன

தட்டினில் வைத்த மாவும் தகுசுவை ஆட்டின் ஊனும்
மட்டிலாது இன்னும் வைத்த வண்ணமே இருக்கக் கண்டார்
வட்டித்த பேர்களோடு வளர்விருந் துண்டார் எல்லாம்
தட்டித்தம் கைகள் கொட்டித் தலைவர்தம் மாண்பி சைத்தார். 40

கொம்புகள், குளம்புகள், எலும்புகள்

அனைத்தையும் கொணர்க

தலைவரும் சமைத்த ஆட்டின் தாள்களின் குளம்பு நான்கும்
தலைதரும் இரண்டு கொம்பும் தகுசுவை யோடும் உண்ட
நிலையினில் கிடந்த என்பும் நேர்முன்னே வைக்க என்றார்
அலைந்தலைந் தவற்றை எல்லாம் அனைவரும் கொண்டு சேர்த்தார்; 41