பக்கம் எண் :

406துரை-மாலிறையன்

களியனை முகம்மது அடித்தார்கள்

கள்ளினைக் குடித்தான் தன்னைக் கண்டனர் நபியார் ஓர்நாள்
எள்ளினார் இழிந்தான் என்றே ஏசினார் மட்டை யாலும்
உள்ளதோர் செருப்பி னாலும் உறுதியாய் அடித்தும் உள்ளார்
வள்ளலாம் இறைவன் சொன்ன வழியினைப் பழித்தான் என்றே! 36

முதல் கச்சுப் பயணம் போதல்

நபிபெருமான் கனவு கண்டார்கள்

மதினா மண்ணை மிதித்தாண்டு மகிழ்வாய் ஆறும் ஆனதன்பின்
புதுவான் நெறியார் முகம்மதுகோன் புகழ்சால் மக்கா நகர் நாடி
இதயம் மகிழக் கூடுகிற இனிய கச்சுப் பயணத்தை
முதுதோழர்கள் சூழ்ந்துவரும் முறையில் கனவாய்க் கண்டார்கள். 37

உற்றார் உறவினரைக் காண ஆர்வம்

கனவு கனிந்து நினைவாகிக் கருத்தில் கலந்து செயல்படவே
மனமே மகிழ்ந்த தோழர்கள் மனைவி மக்கள் மற்றுமுள
இனமும் வாழும் மக்காவில் இனிமை காணப் போகின்றோம்
எனும்மா மகிழ்ச்சி மிக்கவராய் எழுந்தார் ஊக்கம் உந்திடவே! 38

புனிதப் பயணத்தில் பகை வேண்டாம்

புனிதப் பயணம் மேற்கொள்ளப் போகும் அன்புத் தோழர்களே!
இனிதாம் இந்த இருதிங்கள் இதயப் பகையே தோன்றாமல்
கனிவாய் நடக்க முயலுங்கள் கத்தி உறையுள் இருக்கட்டும்!
எனினும் அதனைப் பிறர்முன்னே எடுக்கக் கூடா தெனஉரைத்தார்; 39

ஆயிரத்து நானூறு பேர்களுடன் புறப்பட்டார்

அமைசீர் நுழையி லாதம்மை அமைதி யாக மதினாவை
இமைபோல் காக்க எனக்கூறி இனிய கசுவா ஒட்டகத்தில்
அமர்ந்து மக்கா நகர் போனார் ஆயி ரத்து நானூறு
தமைக் காக்கின்ற தோழர்கள் தவழ்வான் தூதர் பின்போனார். 40

குறைசியர்கள் தடுத்தனர்

பகையே இன்றிச் சென்றார்கள் பகர்வான் தூதர் என்றாலும்
தகையே இல்லாக் குறைசியர்கள் தாக்கும் எண்ணம் மிக்கவராய்ப்
புகையும் பகையின் இயல்பதனால் புகழ்முகம் மதுவை மக்காவுள்
புகவே கூடா தென எண்ணிப் போக்கி விட்டார் பெரும்படையே! 41