பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்409


செயினபுவுக்குத் தூது அனுப்பினார்

உடன்பாடில் லாதார் வாழ்க்கை பாம்பொடும் உறைவ தன்றோ?
இடம் காலம் எல்லாம் தேர்ந்தே இருவரும் பிரிந்து விட்டார்
நடப்பவை எல்லாம் அந்த நல்லவன் இறையால் என்னும்
கடனறி முகம்மதண்ணல் கருத்தொடும் தூது போக்கி; 54

முகம்மது மணக்க விரும்புகின்றார்

“தூதுவ! நீபோய் தையல் தூய் செயினபுவைப் பார்த்து
மாதவ மணியாம் உம்மை மகம்மது மணக்க எண்ணும்
காதலை உரைக்க” என்றார்; கருத்தினைக் கேட்ட அந்தத்
தூதரும் விரைந்து சென்று தோகைமுன் அதனைச் சொன்னார்; 55

செபுறயீல் வந்தார்

இறையவன் விருப்ப மானால் இயலலாம் என்று சொன்ன
நறைமலர்க் கூந்த லாரின் நல்லசீர் கருத்தை மீண்டும்
முறையுடன் வந்து சொன்னார்; முகம்மது நபிகள் கேட்டு
நிறைவுடன் இருந்த போதே நேர்செபு றயீலும் வந்தார்; 56

விண்ணகத்தில் தங்கள் திருமணம் நடந்து விட்டது

செம்மலே! நுமக்கும் நல்லார் செயினபு தமக்கும் வானில்
நம்மவர் சூழ மன்றல் நடந்தது சொன்னேன்” என்றார்
செம்மையார் கூறி வானம் சென்றதும் அண்ணலாரும்
இம்மென விரைந்து சென்றே எழில்மணி யாரைப் பார்த்தார்; 57

செயினபு திருமணத்துக்கு இசைந்தார்

ஆணையே இட்டான் அந்த ஆண்டவன் என்ற போதே
மானையே நிகர்த்த அன்பு மங்கையாம் செயினபூவும்
தேனையே உண்டார் போலத் தெளிந்தநற் கருத்தை ஏந்தித்
“தீனையே வளர்க்க வந்தேன் திருமணம் நடக்கும்” என்றார்; 58