பக்கம் எண் :

414துரை-மாலிறையன்

விலங்குகளை நாம் காக்க வேண்டும்

விலங்கு சொன்ன காரணத்தை வெற்றி வீரர் நபி கேட்டுக்
கலங்கச் செய்த மானிடனைக் கண்முன் அழைத்து நம் மனிதர்
குலங்கள் தழைக்க உழைக்கின்ற கூட்டம் இந்த விலங்கினங்கள்
வளங்கள் நாம்பெற் றுயர்வதெலாம் வாயில் லாத விலங்குகளால்; 18

வடுவற்ற வையத்தை வாழ வையுங்கள்

அடிமை யாக்கி வருத்தாமல் அன்பாய் வளர்த்துப் பயன்பெறுங்கள்
கொடுமை செய்து கெடுக்காமல் கொடுங்கள் உணவு வினைசெயவே
நடுவு நிலைமை யோடும்அவை நன்றாய் வாழ உதவிடுங்கள்
வடுவில் லாத வையத்தை வளர்க்க விலங்கை வாழ்விப்பீர்.” 19

விலங்குகளின் மேல் அன்பு பொழிந்தார்

எனநல் லுரையால் விலங்குதனை ஏய்த்த அந்த எளியோரை
மனமெய் மொழியால் நல்லவராய் மாற்றி வைத்து விலங்குகளின்
இனத்தைக் காக்கும் இயல்புதனை எழில்வை யத்தார் உணரவைத்தார்
இணையில் லாத இறையவனின் எழில்தூ தாக வந்தவரே! 20

மழை பொழிய வைத்தார்

சூரியன் வருத்தினான்

நீல வானம் மாறவில்லை நெருப்புக் கக்கும் சூரியனின்
கோலக் கதிரின் கொடுமைகளோ குறையவில்லை மதினாவின்
சோலை சூழ்ந்த வயல்வெளிகள் சுற்று முற்றும் காய்ந்துவிடக்
காலப் பருவம் முறை மாறிக் காய்ந்து நாடு தீய்ந்ததென; 21

மதீனாவின் நிலைக்கு இரங்கினார்

மலைக்கு நிகராம் மாண்புள்ள மதினா வேந்தர் முகம்மதுமுன்
சுலைக்கு எனும்பேர் கொண்டொருவர் சொல்லி நிலைமை விளக்கினரால்
இலைக்கும் கூட இரங்குகிற எழில்மா நபியார் மதினாவின்
நிலைக்கா இரங்கா திருப்பார்கள் நெகிழ்ந்தார் உள்ளம் அப்போழ்தே; 22

மழை இலையேல் மானமும் கெடும்

வானம் பொழியா திருந்திடுமேல் வையம் நிலையாது அதனாலே
தான தவங்கள் தங்குதலும் தகுமா மழையின் விளைவாலே
ஆன பெருமை ஆவ தெல்லாம் அரிய வானின் பொழிவாலே
மானம் காக்க மனிதர்க்கு மழையே வேண்டும் மண்மேலே; 23