பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்417


இறைவனிடம் வேண்டுங்கள்

வேண்டிக் கொண்டார் விழிஇல்லார் விண்ணின் தூதர் அது கேட்டு
“நீண்ட புகழோன் இறைவன்மேல் நிறைநம் பிக்கை யால் வந்தீர்!
தூண்டும் நல்ல உணர்வோடு தூய்மை செய்து கொள்ளுங்கள்
வேண்டி வேண்டி அவன்முன்னே விருப்பம் தன்னைக் கேளுங்கள். 36

இறைவன் இரக்கம் உள்ளவன்

அன்பால் கேட்கும் அடியார்க்கே அளிக்கும் பெருமை அவன்கொண்டான்
தன்பால் இரந்த எளியோரைத் தாயைப் போலக் காத்திடுவான்
என்பால் கேட்டீர் அதுபோல இறைவன் முன்னும் கேட்க என
துன்பால் நிறைந்த உளத்தார்பால் தூய அண்ணல் செப்பிடவே; 37

வையத்து எழிலைக் காண அருள்க

இரங்கத் தக்கார் இறைவன்முன் இதயத் தூய்மை கொண்டவராய்
வரங்கள் அருளும் பேரொளியே வையத் தெழிலை யான் காண
மரங்கள் செடிகள் கொடிகளெலாம் மணக்கும் பூக்கள் வளம் காணும்
உரம்கண் பெறவே அருள் செய்க ஒளியே! என்று தொழுதாரே! 38

நெகிழ்ந்து நெக்குருகி வேண்டினார்

பணிந்து கேட்கும் நலமெல்லாம் பரிந்து நல்கும் இறையவனே
குனிந்து குனிந்து தொழுகின்றேன் குலைந்து போகா தென்வாழ்வில்
கனிந்து பயனே புரிந்தொளிரக் கண்ணை ஈந்து காக்க வென
நினைந்து நினைந்து நெக்குருகி நெகிழ்ந்து நெகிழ்ந்து வேண்டினரே! 39

கண் பெற்று மகிழ்ந்தார்

ஒப்பில் லாத இறைவனவன் ஒளியில்லாத கண்ணவரின்
தப்பில்லாத வேண்டுதலைத் தனிப்பே ரருளின் மாண்பதனால்
ஒப்பி உடனே நலம் தந்தான் ஒளிக்கண் பெற்றுச் சிறந்தவரோ
எப்பா ரினரும் போற்றுகிற எழில்நா யகத்தின் முன்கனிந்தார்; 40

ஒருவன் நோயுற்று வருந்தினான்

பாங்காய் வளர்த்த எழில்மேனி படைத்த ஒருவன் சின்னாள்கள்
தீங்காய் வினைகள் செய்ததனால் தெளிவை இழந்தான் முகம்இருண்டு
வீங்கிக் கண்கள் ஒளிகுன்றி வீசி நடந்த கைகால்கள்
வாங்கி வைத்த செயற்கைபோல் வலிமை இழந்து துயருற்றான். 41