பக்கம் எண் :

42துரை-மாலிறையன்

அந்தக்கை குழந்தையைத் தூக்கிச் சென்றது

கண்மணியே கண்விட்டுப் போனதுபோல்

கலக்கமுற்றுக் கருத்தழிந்து

‘விண்மணியே! விரிவெளியே! வேதனையைத்

தீர்க்க வந்த வெற்றிக் கோவே!

மண்மனிதர் வாழ்க்கையினை மலர்த்தவந்த

மதிஒளியே! மண்ணில் எங்குத்

தண்முகிலாய்த் தவழ்ந்தனையோ? தனித்தீங்கே

தவிக்கின்றேன் தாயேன்” என்றார். 34

எங்கெங்கும் குழந்தையைத் தேடினார்

வலியிழந்த பிடியைப்போல் வகையிழந்தார்

தீச்சுட்டு வருத்து கின்ற

நிலைப் புழுப்போல் நினைவிழந்து கீழ்விழுந்து

நெடுமூச்சே விட்டெறிந்தார்

மலைப்புறமும் மலர்ச்சோலை வழித்தெருவும்

மயக்கமுறத் தேடித் தேடி

அலிமாநல் அன்னையவர் அகம்குழைந்தே

ஆங்காங்கே அழுது நின்றார்; 35

வா! கோயிலுக்குப் போய் வேண்டுவோம்

வழிப்போன ஒருமுதியோர் வருத்தமிகும்

அலிமாவின் வாட்டம் போக்க

“ஒழித்திடுவாய் உன்துன்பம் மறைந்தசேய்

உடன்காண முடியும் உன்னால்

அழைத்தொருநல் கோயிலுக்குள் சென்றிடுவேன்

அவ்விடத்துத் தெய்வத்தின்முன்

“எழிற்சேயை மீட்டிடுக” எனக்கேட்டே

இரக்கமுடன் வேண்டிக் கொள்வாய்;” 36