பக்கம் எண் :

422துரை-மாலிறையன்

கனானியும் வந்து கண்டார்

உறுவா உரைத்த உரையே போல் உற்ற கனானி என்பானும்
மறுவே இல்லா முகம்மதுவின் மனத்தின் தூய நிலை அறிந்து
குறைசி யர்கள் முன்சென்று குற்றமில்லார் முகம்மதுவே
உறுவான் நெறியார்” எனக்கூற ஒடுங்கினார்கள் குறைசியரே! 66

சுகைகலும் அவ்வாறே சொன்னார்

மற்றோர் சொற்ற முறைப்படியே மற்றும் சுகைல் என் பான்தானும்
குற்றம் இல்லார் நபி நல்லார் கொள்கை வல்லார் என எண்ணி
அற்றார்க் கருளும் முகம்மதுவே! அடியேன் உரையைக் கேளுங்கள்
வெற்றுப் பேச்சால் விளைவில்லை வீண்காலம்தான் கழிந்தேகும்; 67

உடன்படிக்கை எழுதச் சொன்னார்

இருசாரார்க்கும் ஏற்றபடி இனிதாய்ச் செய்க உடன்படிக்கை
பெருமை அதுவே எனச் சொன்னான் பெரியோர் தாமும் அதுவேதான்
அருமையான செயல் என்றே அலீயார் தம்மை அருகழைத்தே
அரிதாய் நல்ல உடன்படிக்கை அதனை எழுதச் சொன்னார்கள். 68

அடுத்த ஆண்டே கச்சுத் தொழுகை என்றான்

“அருளும் அன்பும் உடையவனே அல்லா” எனவே எழுதுவதை
இருளில் இருந்த சுகைல் மறுத்தே “அல்லா” என்றே எழுதென்றான்
அருள்வான் நபியைத் தூதரென அறியேன் எனவும் மறுத்துரைத்தான்
வரும்நல் ஆண்டு முதலாக வரலாம் கச்சுத் தொழுகைஎன்றான். 69

இந்த ஆண்டு தொழுதால் எங்களுக்கு மதிப்பில்லை

“வேண்டி வந்தோம் தொழ ஈங்கே வேண்டா என்று மறுக்கின்றீர்
மாண்ட தொழுகை அது புரிய மறுப்பதிவ்வாண்டேன்?” என்றார்
ஈண்டு நீவிர் தொழ இசைந்தால் எங்கள் மதிப்பு மாண்டு விடும்
வேண்டும் என்றே தான் நாங்கள் விரும்போம் இந்த ஆண்டென்றான்; 70

சுகைல் எண்ணத்தை ஏற்றுக் கொண்டேன்

கண்ணும் கருத்தும் இல்லான் போல் கச்சுத் தொழுகை மறுக்கின்றான்
மண்ணும் கூட இவன் மறுப்பை மதிக்கா தீங்கே எனநெஞ்சில்
எண்ணி நபிகள் நாயகமும் இயம்பி வந்த உறுதியினை
எண்ணிச் சுகையில் எண்ணத்தை எற்றுக் கொண்டே எழுதினரே! 71