பக்கம் எண் :

438துரை-மாலிறையன்

நம்நெறி சிறக்க மைமுனாவை மணந்து கொள்க

இரக்கமே உருவாய்க் கொண்ட இதயத்து நபியார் தம்பால்
புரக்கவே என்று சொன்ன பொன்மொழி கேட்டு நம்தீன்
பரக்கவும் குறைசி யர்கள் பணியவும் வேண்டு மாயின்
நிரைக்கவின் கொண்ட பெண்ணை நேர்மணம் முடிக்க வேண்டும். 65

விருந்துண்ணக் குறைசியரே! வருக

மனத்தினால் இதனை எண்ணி மகம்மது மைமூ னாவை
இனத்தினர் பெருமை காக்க எழில் மணம் முடித்த பின்னே
மணத்தினை யேமுன் னிட்டு மகிழ்விருந் தளிக்க எண்ணி
அனைத்துள்ள குறைசியர்க்கும் அழைப்பினை விடுத்த போதும்; 66

உடன்படிக்கை மீறுதல் தவறு

கூடிவா ராத நெஞ்சக் குறைசியர் ஒன்று கூடி
“நாடிநாம் செய்து கொண்ட நல்லுடன் படிக்கை மீறி
நீடியே மக்காவிற்குள் நிற்பதும் தவறே” என்றார்.
பீடுயர் அண்ண லாரா பிழையினைச் செய்வார் ஆங்கே?” 67

நபிகளார் உடன்படிக்கையை மதித்தார்

இமைத்திடும் பொழுதும் ஈங்கே இருந்திடல் ஆகா தென்றே
சமைத்திடும் விருந்தும் கூடச் சாப்பிடல் துறந்து பண்பால்
தமைத் தோழர் சூழத் தங்கள் தகுமதீ னாவைச் சேர்ந்தார்
அமைந்தஇத் திரும ணந்தான் இறுதியாய் அமைந்த தாமே! 68

அரசர்க்கெல்லாம் மடல் விடுத்தார்

மண்ணாளும் அரசர்க் கெல்லாம் மடல்தமை அனுப்பி, “நீவிர்
விண்ணாளும் அல்லா மாண்பே விளம்புவீர்!” என்றார்; ரோமின்
தண்ணார்ந்த அரசைச் சார்ந்த தரைபுசு ராவின் வேந்தன்
புண்ணார்ந்த நெஞ்சம் கொண்டு புகழ்மடல் கிழித்துப் போட்டான். 69

புசுரா மன்னன் தூதுவரை அழித்தான்

மடலொடு சென்ற தூது மனிதரை அழித்துச் சாய்த்தான்
கடலொடும் ஒருபே ராறு கடிந்துமுன் னெழுதல் போல
உடல்பொருள் ஆவி எல்லாம் ஒருவற்கே என்று வாழும்
கடமையில் தவறா மன்னர் கனன்றெழுந் தோங்கி நின்றார்; 70