பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்453


அல்லா அனைவரையும் மன்னிப்பான்

குற்ற மற்ற குறைசியரே! குற்றம் செய்வார் எவருக்கும்
முற்றும் அருள்வான் அல்லாவே! முழுதும் அருளின் உருவானான்
கற்ற யூசுப் நபியும் உடன் பிறந்தார் தமைமன் னித்ததுபோல்
உற்ற உமையும் மன்னித்தேன் உணர்க” என்றார் பெருமானே! 54

சிலைகள் மண் மேடாயின

மக்கா மக்கள் எல்லாரும் வரிசை வரிசையாய் வந்தே
அக்கால் கலிமா ஓதிப்பின் அல்லா புகழை எண்ணி நலம்
மிக்கார் ஆனார் ஆங்காங்கே மேவி இருந்த உருச்சிலைகள்
மக்கா தெருவில் மண்மேடாய் மாறிச் சென்று மறைந்தனவே! 55

அவாசு இனத்தார் பொறாமை

அன்னை அலிமா குலத்தார்கள் அவாசின் என்னும் கூட்டத்தார்
மன்னர் நபியார் தங்கள்பால் மாறாப் பகைமை மேற்கொண்டார்
மன்னும் மதினா அதனைப்போல் மக்கா மண்ணும் வென்றதனால்
இன்னும் பகைமை பெரிதாக இயற்றிக் கொண்டார் அன்னவரே! 56

இசுலாம் வீரர் செருக்குற்றனர்

ஆகாப் பகையை மேற்கொண்ட அவாசின் குலத்தார் நிலைஎண்ணி
வாகை சூட வள்ளல்பிரான் வலிய படையைத் திரட்டி அதைப்
போக விடுத்துத் தாம் போனார்; போர்வீரர்கள் தம்வலியால்
ஆகும் வெற்றி எனஎண்ணி ஆகாச் செருக்கு மனம் கொண்டார். 57

அல்லா உதவி இன்றி எது நடக்கும்?

வெற்றி வெற்றி எனக் கூறி விரைந்து சென்றார்; அல்லாவைப்
பற்றி ஏதும் நினையாமல் படையின் பெருமை தான்நினைத்தார்
மற்றிங் கெல்லாம் நடப்பவைகள் மணிவான் அல்லா நெறியன்றி
முற்றும் பிறரால் நடந்திடுமோ? முற்றச் சென்றார் படைஞர்களே! 58

பள்ளத்தாக்குப் போர்

படைகள் தாயி பிடம் நோக்கிப் பாய்ந்து செல்ல இடைவழியில்
கிடந்த பள்ளத் தாக்கொன்று கீழே போக மேல் நிலையில்
அடர்ந்த அவாசின் படைமக்கள் அண்ணல் படைமேல் அம்புகளைத்
தொடர்ந்த மழைபோல் பொழிந்தார்கள் தோழர் படைபின் வாங்கிடவே! 59