பக்கம் எண் :

458துரை-மாலிறையன்

சூரிய கிரகணம் இயற்கைச் செயல்

கதிரோன் மறைப்பும் அந்நாளில் காணக் கண்டார் அப்போது
புதுமை ஒன்று புவிமண்ணில் புரிவான் இறைவன் எனக்கூறி
இதனை இறைவன் காண்பித்தான் என்றார் எளியோர் அன்னார்க்கு
இதமாய் ஓர் நல் பொன்னுரையை இயம்பினார்கள் முகம்மதுவே! 84

எல்லாம் இயற்கையாய் நடப்பன

முதுமை இளமை என்பதுவும் முகிழ்த்தல் மறைதல் என்பதுவும்
புதுமை இல்லைப் பொதுவாகப் புவியில் நடக்கும் இயல்நெறியே;
எதுவும் இறைவன் செயல் எனினும் இயற்கை யாக நடப்பதனை
இதைமுன் னிட்டு நடப்பதென எண்ணாதீர்கள் எனச் சொன்னார். 85

கதிர் மறைப்பு நிகழ்ந்தால் கடவுளைத் தொழுங்கள்

கடவுள் செயலால் நடக்கின்ற கதிரோன் மறைப்பு நிகழ்ந்திட்டால்
உடனே தொழுகை நடத்தியவன் உயர்ந்த புகழை வாழ்த்துங்கள்
கடமை இதுவே எனக்கூறிக் கடவுள் முன்னே தொழுதார்கள்
தொடர்ந்த தோழர் குலத்தினரும் தொழுகை நடத்திச் சிறந்தாரே! 86

அண்ணலாரின் மகளார் செயினபு மறைந்தார்

உற்ற சேயும் அல்லாவின் ஒளிச் சீர் அடியில் போய்ச் சேர்ந்த
மற்றவ் வாண்டின் ஒருநாளில் மகளார் ஆன செயினபுவும்
அற்றார்; ஆவி யதுதானும் அல்லா அடியை அடைந்ததுவே
கற்ற மேலோர் கவின்நபியார் கடவுள் அடியேதுணை என்றார்; 87

சிரியா மன்னன் போர் எடுத்தான்

உரிய மக்கா நகர் நீங்கி ஒன்ப தாண்டும் ஆகிவிட
விரியும் முசுலிம் நிலைகண்டு வியந்தும் பொறாமை மிகக் கொண்டும்
சிரியா நாட்டின் சிறுமன்னன் சினந்து ரோமப் படைவலியோ(டு)
அரிய வலிமை பெற்றவனாய் அல்லா படைமேல் பொரவந்தான். 88

அண்ணலாரின் படையும் எதிர்த்தது

கொடிய வேனில் காலத்தில் கூட்டி வந்தான் படைஎனினும்
படியப் படுத்தா கொண்டிருப்பார் பரமன் தூதர்? உடன்தங்கள்
நெடிய படைவீரரை நோக்கி, “நேரம் இதுவே புறப்படுங்கள்
முடிமேல் தீயே விழுந்தாலும் முயல்வோம் அல்லா துணை” என்றார்; 89