பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்459


போருக்குப் பொருள் தருக என்றார்,

முப்பத் தாயி ரம்வீரர் முன்னே வந்தார் என்றாலும்
அப்பற் றுள்ளோர் தமைநோக்கி அண்ணல் உரைத்தார் “தோழர்களே!
தப்பித் தோட முயன்றாலும் தாக்கா மலேநாம் விடமாட்டோம்
இப்பேர்ப் பட்ட போருக்கே ஏற்ற பொருளைக் கொணர்க” என்றார். 90

தோழர்கள் பொருள் அனைத்தும் தந்தனர்

தமிழுக் கென்றால் உயிர்தமையும் தருவோம் என்ற முற்காலத்
தமிழர் போலச் செயல்பட்டுத் தந்தோம் தந்தோம் எனக்கூறி
இமியும் தமக்கென் றெப்பொருளும் எடுத்துவைத்துக் கொள்ளாமல்
அமையும் போருக் களித்திடவே அணிய மானார் தோழர்களே! 91

பெண்கள் நகைகள் தந்தனர்

உதுமான் அப்துற் றகுமானும் உமரும் அபூபக் கர்தாமும்
இதுவே தங்கள் கருத்தாகில் எல்லாம் உமதே எனச்சொன்னார்
புதுமா மலர்போல் முகம்கொண்டு பொலியும் பெண்கள் பல்லாரும்
அதுபொன் மாலை இது மணிகள் ஆகும் போருக்கு எனத் தந்தார்; 92

ஒரு நாள் கூலியில் பாதியை அளித்தார்

வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் வினையார் ஒருவர் அபூஉகையில்
அயர்வே இன்றி இரவுபகல் அருந்தோட்டத்தில் நீரிறைத்து
முயற்சிக் கேற்ற கூலிஎன முதிர்பே ரீத்தம் பழம்பெற்றார்
வியக்க அவற்றுள் பாதியினை வெல்போர்க் கென்றே வழங்கினரே 93

வான் தூதர் மனமகிழ்ந்தார்

ஆ! ஆ! இதுவே பேருதவி அன்பாய்ப் பெற்றுக் கொள்கின்றேன்
நாவால் இந்தச் செயல்புகழ்ந்து நவிலும் திறத்தில் இல்லை என
மாவான் தூதர் மனமகிழ்ந்து மற்றப் பொருள்மேல் கனியை எலாம்
தூவி விடவே சொன்னார்கள் தூய அன்பின் பெருமையினால்; 94

எல்லாரும் போருக்கு எழுந்தனர்

வலிமை இல்லா எளியோரை வரவே வேண்டா எனக்கூறிப்
பொலியும் நற்போர் வீரர்களைப் போருக் கெழவே செய்தார்கள்
நலியும் உடல்கொண் டோர்சிலரும் நபியார் தம்மேல் அன்பினராய்ப்
புலிபோம் வழியில் எலியாய் நாம் போருக்கெழுவோம் எனப் போனார்; 95