பக்கம் எண் :

46துரை-மாலிறையன்

இவர் புதுமையாய்த் தோன்றுகின்றாரே!

பொன் மதினாச் சிறுவரொடும் பொய்கை ஆடும்

புதுமதிபோல் முகத்துமுகம் மதுவை நோக்கிப்

“பன்மணிகள் கூட்டுறவால் படைத் தளித்த

பருமணியோ? விண்ணகத்தின் பொலிவு தானோ?

புன்மனிதர் நிலைமாற மண்ணில் வந்த

புதுமருந்தோ? விண்மலரின் சுவைத்தேன் தானோ?

நன்மையெலாம் அளிக்கவந்த நட்புத் தூணோ

நாம்காணும் இப்புதுமைச் சேயே” என்றார். 46

கழுத்தில் முத்திரை - கத்தூரி மணம்

தலைக்கு மேல் முகில்

முத்து நிரைத் தனபோலப் பற்கள் கொண்டு

முன்னகைசெய் முகம்மதுவின் கழுத்துப் பின்னே

முத்திரைஒன்று இருப்பதுவும் அதனால் மேனி

முழுவதுமே ஒளிர்ந்திடவும் கண்டார்; பாதம்

இத்தரையில் படாவண்ணம் நடக்கக் கண்டார்

எப்பொழுதும் தலைக்குமேல் குடையைப் போல

ஒத்துறையும் முகில்கூட்டம் கண்டார்; நல்லோர்

உடல்நிழலும் தரைமீதில் விழாமை கண்டார்; 47

இவர் நபிபெருமானே தாம்

“இத்தகையோர் ஒளிநபியார் வருவார் என்றே

இயம்புகிற மறைமொழியே வாய்மை ஆகக்

கொத்துமலர் போல் போகும் சிறுவர் நாப்பண்

கொள்ளைஅழ கோடுவரும் ஆமி னாவின்

சொத்தனைய புதல்வரிவர் வருகை தந்தார்

சுடர்முகமும் - பொன்னொளியும் நாம் முன் காணும்

இத்தனையும் இவர்அந்த நபியே என்றிங்(கு)

இயம்புவன வாய் இருக்கக் கண்டோம்” என்றார். 48